Skip to main content

அருவி தாழ்ந்த பெருவரை போல(புறநானூறு 198)

மழைத் துளிக்கு ஏங்குகின்ற பறவை போல உன் காலடி நிழலை நாடி வந்திருக்கிறேன். என்னை ஆதரி என்று கூறுகிறது இந்தப் பாடல்.


பாடல் கூறும் செய்தி இதுதான்:

மன்னா

 

அருவிவிழும் மலை போல முத்துமாலை தவழ விளங்குகிறது உன் மார்பு.

 

உன் மனைவி மக்களோடு நீ வாழ்க என்று கனவிலும் கூட உன்னை வாழ்த்தினேன்.

 

சிவபெருமான் போல உன் செல்வாக்கு எங்கும் பரவியிருக்கிறது.

 

சிறப்பான வெற்றிகள் ஓடு நீயும் உன் புதல்வர்கள் நீண்ட நாள் வாழ்க.

 

நான் சொந்த பந்தம் இல்லாதவன்.

பக்கத்து நாட்டுக்காரன்.

மழைத்துளிக்கு ஏங்குகின்ற பறவை போல உன் காலடி நிழலுக்கு வந்திருக்கிறேன்

என்னை ஆதரித்து அருள வேண்டும்


பாடல்:


அருவி தாழ்ந்த பெருவரை போல
ஆரமொடு பொலிந்த மார்பின் தண்டாக்
கடவுள் சான்ற கற்பின் சேயிழை
மடவோள் பயந்த மணிமருள் அவ்வாய்க்
கிண்கிணிப் புதல்வர் பொலிகஎன்று ஏத்தித்
திண்தேர் அண்ணல்! நிற்பா ராட்டிக்
காதல் பெருமையின் கனவினும் அரற்றும்என்
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப
ஆல்அமர் கடவுள் அன்னநின் செல்வம்
வேல்கெழு குருசில்! கண்டேன்; ஆதலின்,
விடுத்தனென்; வாழ்க நின் கண்ணி! தொடுத்த
தண்டமிழ் வரைப்புஅகம் கொண்டி யாகப்
பணித்துக்கூட் டுண்ணும் தணிப்பருங் கடுந்திறல்
நின்னோர் அன்னநின் புதல்வர் என்றும்
ஒன்னார் வாட அருங்கலம் தந்துநும்
பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தநின்
முன்னோர் போல்க இவர் பெருங்கண் ணோட்டம்;

யாண்டும் நாளும் பெருகி ஈண்டுதிரைப்
பெருங்கடல் நீரினும் அக்கடல் மணலினும்
நீண்டுஉயர் வானத்து உறையினும் நன்றும்
இவர்பெறும் புதல்வர்க் காண்தொறும் நீயும்
புகன்ற செல்வமொடு புகழ்இனிது விளங்கி
நீடு வாழிய நெடுந்தகை! யானும்
கேளில் சேஎய் நாட்டின்எந் நாளும்

துளிநசைப் புள்ளின்நின் அளிநசைக்கு இரங்கிநின்
அடிநிழல் பழகிய வடியுறை;
கடுமான் மாற! மறவா தீமே.

(புறநானூறு 198)

 

பாடியவர்: வடமவண்ணக்கன் பேரி சாத்தனார்.


பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.


திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.


துறை: பரிசில் கடாநிலை. பரிசில் கடா நிலை என்பது “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.

சொல்லும் பொருளும்:


வரை = மலை

ஆரம் = மாலை

மணி = பவழ மணி

கிண்கிணி = காலணி.

அரற்றுதல் = கதறுதல்

ஆல் = ஆல்மரம்

வரைப்பு = எல்லை

கொண்டி = கொள்ளை

நெடுநகர் = பெரிய அரண்மணை.

உரை: 

அருவி வீழும் பெரிய மலைபோல் ஆரத்தோடு விளங்கும் மார்பையுடையவனே!

கடவுள் தன்மை அமைந்த கற்புடைய உன் மனைவி உன் மீது குறையாத அன்புடையவள். அவள் பெற்ற உன் புதல்வர்கள் சிறப்புடன் வாழ்க என வாழ்த்துகிறேன்.

வலிய தேரையுடைய தலைவ!

உன்னைப் பாராட்டுகிறேன். பரிசில் மீது மிகுந்த விருப்பம் உள்ளதால், கனவிலும் உன் புகழையே கூறிக்கொண்டிருக்கிறேன்.

வேலையுடைய வேந்தே!

அப்பரிசிலின் மீது எனக்குள்ள விருப்பத்தால் என் நெஞ்சம் இன்புற்று மகிழுமாறு, ஆலமரத்தில் அமர்ந்த கடவுள் போன்ற உன் பெருஞ்செல்வத்தைக் கண்டேன். ஆதலால், நான் விடைபெறுகிறேன்.

உன் தலையில் அணிந்துள்ள மாலை வாழ்க! நீ தமிழகம் முழுவதும் கொள்ளைகொண்டு உன் பகைவரை வென்று அவர் பொருள்களைக் கொள்ளை கொள்ளும் மிக்க வலிமையையுடையவன். உன் புதல்வரும் உன்னைப் போன்ற மிக்க வலிமை உடையவர்கள்.எந்நாளும் பகைவர்களை அழித்து அவர்களுடைய அரிய அணிகலன்களைக் கொண்டுவந்து உன்னுடைய பொன்னாலான பொருள்கள் நிறைந்த பெரிய அரண்மனையில் உன் முன்னோர்கள் வைத்தார்கள். அந்த முன்னோர்களைப் போலவே உன் புதல்வரின் கருணை நிரம்பிய உள்ளமும் உள்ளது.


எப்பொழுதும் அலையுடன் கூடிய கடல் நீரினும், அக்கடல் மணலினும், மழைத்துளிகளினும் அதிக நாட்கள் உன் புதல்வரின் பிள்ளைகளோடும் நீ விரும்பிய செல்வத்தோடும் வாழ்க!

நான் உறவினர் இல்லாத தொலைவில் உள்ள ஊரில் மழைத்துளிக்கு ஏங்கி இருக்கும் வானம்பாடிப் பறவையைப் போல் உனது பரிசிலை விரும்பி உன் நிழலில் வாழ்ந்து பழகிய அடியேனாகவே வாழ்வேன். விரைவாகச் செல்லும் இயல்புடைய குதிரைகளையுடைய பாண்டியனே! நீ செய்த செயலை மறவாதே!




Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...