செப்டம்பர் 20,1798:
கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.
கட்டபொம்மனும் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார். 20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.
கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்கள். கட்டபொம்மன் தப்பிவிட்டாலும் அவரது வக்கீல் சிவசுப்பிரமணியபிள்ளை கைது செய்யப்பட்டார்.
கட்டபொம்மனை அவமானப்படுத்திய ஜாக்சன் மீதும், ஆங்கில வீரர்களைக் கொன்றதற்காக கட்டபொம்மன் மீதும் தனியாக ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியே வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் இடம்பெற்ற "நீர் தான் வீரபாண்டிய கட்டபொம்மனோ? நீர் தான் ஜாக்சன் துரை என்பவரோ?" என்று தொடங்கும் புகழ் பெற்ற வசனத்துக்கு காரணமானது.
ஜாக்சன் துரை: ம், நீர் தான் வீரபாண்டிய கட்டபொம்மனோ?
வீரபாண்டிய கட்டபொம்மன்: நீர் தான் ஜாக்சன் துரை என்பவரோ?
ஜாக்சன் துரை: ஏது, வெகுதூரம் வந்துவிட்டீர்?
கட்டபொம்மன்: நட்பு விரும்பி அழைத்ததாக அறிகிறேன். அதே விரும்பி நானும் வந்துள்ளேன்.
ஜாக்சன் துரை: நட்பு வேண்டும், ஆனால் அதற்கேற்ற நடத்தை இல்லை உம்மிடம்.
கட்டபொம்மன்: கற்றுக்கொடுக்கும் இனம் தமிழ் இனம். நீர் கற்றுக்கொடுக்க முயற்சிப்பது அறிவீனம்.
ஜாக்சன் துரை: நவாபிடமிருந்து நாட்டுரிமை பெற்றிருப்பது நாங்கள். நீயாக ஏன் பேட்டி காண வரவில்லை?
கட்டபொம்மன்: ஹா...! ஹா...! பேட்டி கொடுப்பவர் நாங்கள். இல்லாவிட்டால் நீ இந்த நாட்டுக்குள்ளே நுழைந்திருக்க முடியாது.
ஜாக்சன் துரை: இறுமாப்பு இன்னும் ஒழியவில்லை உன்னிடம்.
கட்டபொம்மன்: எல்லாம் உடன்பிறந்தவை, ஒழியாது.
ஜாக்சன் துரை: உன் மீது குற்றம் சுமத்துகிறேன்.
கட்டபொம்மன்: என்னவென்று?
ஜாக்சன் துரை: எடுத்துரைத்தால் கணக்கில் அடங்காது.
கட்டபொம்மன்: எண்ணிக்கை தெரியாத குற்றம்.
ஜாக்சன் துரை: எனக்கா எண்ணிக்கை தெரியாது? அகம் பிடித்தவனே, சொல்கிறேன் கேள். உன் நிலத்தில் விளையும் விளைச்சலுக்கு கிஸ்தி கொடுக்கவில்லை. எங்கள் பேரரசுக்கு கீழரசாய் இருக்க திறைப்பணம் செலுத்தவில்லை. வெகுகாலமாக வரிப்பணம் வந்து சேரவில்லை. இந்த பாக்கிக்கெல்லாம் வட்டியும் செலுத்தவில்லை.
கட்டபொம்மன்: ஹா ஹா ஹா ஹா. கிஸ்தி, திறை, வரி, வட்டி. வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கேன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? கழனிவாழ் உழவருக்கு கஞ்சிக் கலயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது நீ மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே! எதற்குக் கேட்கிறாய் திறை, யாரைக் கேட்கிறாய் வரி? போரடித்து நெற்குவிக்கும் மேழிநாட்டு உழவர் கூட்டம், பரங்கியரின் உடலையும் போரடித்து, தலைகளை நெற்கதிர்களாய் குவித்துவிடும் ஜாக்கிரதை.
பள்ளி நாடகங்கள் என்றாலே பலருக்கு இந்த வசனம் நினைவில் வரும்.
செப்டம்பர் 20,1870 :
உரையாசிரியர் மகாவித்துவான் இரா. இராகவையங்கார் பிறந்த தினம்.
கவிஞராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கிய இவர் பல நூல்களையும் எழுதியுள்ளார்.
செப்டம்பர் 20,1878:
தி இந்து நாளிதழின் முதலாவது இதழ் இன்று வெளியிடப்பட்டது.
செப்டம்பர் 20,1893:
பெட்ரோலினால் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்ட கார் இன்று அமெரிக்காவில் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
அன்னிபெசன்ட் அம்மையார் அடையாறில் காலமானார்.
செப்டம்பர் 20, 1999:
திரைப்பட நடிகை டி. ஆர். ராஜகுமாரி மறைந்த தினம்.
Comments
Post a Comment
Your feedback