நீங்கள் மட்டும் எப்படி இளமையாகவே இருக்கிறீர்கள்?
எப்போதும் இளமையாகவே இருக்கும் அந்த ரகசியம் என்னவென்று சொல்கிறார் பிசிராந்தையார்.
பாடல் சொல்லும் செய்தி:
இவ்வளவு வயதாகியும் தாங்கள் எப்படி நரையில்லாமல் இருக்கிறீர்கள்?” என்று என்னைக் கேட்பீர்களானால், சொல்கிறேன்.
சிறப்பான குணங்கள் கொண்ட என் மனைவியோடும், அறிவு நிரம்பப் பெற்ற மக்களோடும் அமைந்தது என் வாழ்க்கை.
நான் எண்ணுவது போலவே, என்னிடம் பணிபுரிபவர்களும் எண்ணிப் பணியாற்றுகிறார்கள்.
என் வேந்தன் முறையல்லாதவற்றைச் செய்யாமல் நாட்டை ஆட்சி செய்கிறான்.
நான் வாழும் ஊரில், நற்குணங்களும் நல்லொழுக்கங்களும் நிறைந்து ஐம்புலன்களையும் வென்று, பணிவோடும் சிறந்த கொள்கைகளோடும் வாழும் சான்றோர்கள் பலர் உள்ளனர்.
பாடல்:
“யாண்டுபல வாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்?” என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியோடு மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும்; அதன்தலை,
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே.
(புறநானூறு 191)
பாடியவர்: பிசிராந்தையர்
திணை: பொதுவியல்.
எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்.
துறை: பொருண்மொழிக் காஞ்சி.
உயிருக்கு உறுதியளிக்கும் இம்மை மறுமைக் கடன்களை எடுத்துக் கூறுதல்.
Comments
Post a Comment
Your feedback