இசைஞானி இளையராஜா
கவியரசு கண்ணதாசன்
முனைவர் சுந்தரஆவுடையப்பன்
என்று பட்டங்களை முதலில் போட்டு அவர்களுடைய பெயர்களை எழுதுவதைப் பார்க்கிறோம்.
இளையராஜா இசைஞானி என்றோ
கண்ணதாசன் கவியரசு என்றோ
சுந்தரஆவுடையப்பன் முனைவர் என்றோ அதை ஏன் மாற்றி எழுதுவதில்லை.
கலைமாமணி, பத்மபூஷன் போன்ற
சிறப்பான பட்டங்கள் எல்லாம் கூட அப்படித் தான் பெயருக்கு முன்பாகவே எழுதப்படுகின்றன.
சிறப்பான பட்டங்களை பெயருக்கு முன்பு தான் போட வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா என்ன?
எப்போது இருந்து இது வழக்கத்தில் இருக்கிறது?
இந்த வழக்கம் தற்போது தான் வந்ததா என்றால் இல்லை.
மகாகவி பாரதியார்
சர். C.V. ராமன்
போல மகாகவி, சர், ராவ்பகதூர், ராவ் சாஹிப் போன்ற பட்டங்கள் கூட பெயருக்கு முன்பு தான் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
பழைய வரலாறு கூட இந்த வழக்கத்தைச் சொல்கிறது. ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் பட்டங்கள் இப்படித் தான் பெயருக்கு முன்பாகக் குறிப்பிடப்பட்டன.
ஏனாதி, பெருநம்பி, காவதி போன்ற சங்ககாலப் பட்டங்களும் பெயருக்கு முன்பாகத் தான் வருகின்றன.
இப்படித் தான் எழுதவேண்டும் என்று விதி இருக்கிறதோ இல்லையோ இப்படி எழுதும் வழக்கம் இல்லை என்று தொல்காப்பியம் ஒரு விஷயத்தைச் சொல்கிறது.
சிறப்பான பட்டங்கள் என்று கருதப்படும் பட்டடங்களுக்கு முன்பாக இயற்பெயரை எழுதும் வழக்கம் இல்லை என்பது தான் அந்தச் செய்தி. அதாவது பட்டதுக்குப் பின் தான் இயற்பெயரை எழுதுவார்கள் என்பது தான் அதன் பொருள்.
சிறப்பின் ஆகிய பெயர்நிலைக் கிளவிக்கும்
இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்
என்பது தொல்காப்பிய விதி.
நமக்கு தொல்காப்பியம் தெரிகிறதோ இல்லையோ தொல்காப்பிய விதி எதுவோ அதுதான் இன்றும் பெரும்பாலும் வழக்கில் இருக்கிறது.
அதெல்லாம் இருக்கட்டும் அது என்ன ஏனாதி, பெருநம்பி, காவதி இதெல்லாம்?
ஏனாதி என்ற பட்டம் அந்தக் காலத்தில் சேனாதிபதிகளுக்கு அரசன் வழங்குகின்ற ஒரு பட்டம். இந்தப் பட்டத்தோடு ஒரு மோதிரமும் வழங்கப்படும். நாயன்மார்களில் ஒருவர் ஏனாதி பட்டம் பெற்றவர். ஏனாதிநாதர் என்பது அவரது பெயர்.
காவதி பட்டம் என்பது?
அந்தக் காலத்தில் பாண்டிய மன்னர்கள் தம்முடைய அமைச்சர்களுள் சிறந்தவர்களாக விளங்கியவர்களுக்கும் வேளாளர்களில் பெரியவர்களுக்கும் காவிதி என்ற பட்டத்தை அளித்திருக்கிறார்கள். அப்படி காவதி பட்டம் பெற்ற வேளாளர் குடும்பத்தில் அரசர்கள் பெண் எடுத்ததும் உண்டு. அதாவது அந்தப் பட்டம் அவ்வளவு உயர்வானது. காவதி பட்டம் பெற்றவர்கள் தலைப் பாகை அணியும் உரிமை பெற்றவர்கள். நடுநிலைப் பண்பில் சிறந்து விளங்கியவர்கள் என்று மதுரைக் காஞ்சி கூறுகிறது. இந்தப் பட்டத்தின் அடையாளமாக பொன்னாலான ஒரு முத்திரை வழங்கப்பட்டது. அதற்கு காவிதிப் பூ என்று பெயராம்.
சரி, பெருநம்பி என்பது என்ன பட்டம்?
பெருநம்பி பட்டம் பெற்றவர்கள் அமைச்சர்களாகத் தகுதியுடையவர்கள். பாண்டிய மன்னனுக்கு மந்திரியாக பெருநம்பி பட்டம் பெற்றவர்கள் அமர்த்தப்பட்டு இருந்தது வரலாறு.
63 நாயன்மார்களுள் ஒருவராகிய குலச்சிறையார் பெருநம்பி பட்டம் பெற்றவர்.
இவர் பாண்டிய மன்னனுடைய அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தவர்.
இங்கு மட்டுமல்ல. இலங்கையிலும் இந்த வழக்கம் தான் இன்றும் நடைமுறையில் இருக்கிறது.
முதலியார் என்பது போர்ப்படையில் சிறந்து விளங்கும் சேனாபதிகளுக்கு இலங்கையில் வழங்கப்படும் பட்டம்.
முதலியார் சபாநாதன் என்றால் முதலியார் என்பது சிறப்பான ஒரு பட்டப் பெயர்.
சபாநாதன் முதலியார் என்று மாற்றி வந்தால் அப்போது முதலியார் சாதிப் பெயர்.
சமீபத்தில் கூட இந்தக் குழப்பம் அரசியல் களத்தில் ஒரு பேசுபொருளாக இருந்தது நமக்கு நினைவிருக்கும்.
போன நூற்றாண்டு வரைக்கும் சமூகத்தில் உதவும் மனப்பாங்கு, தொண்டுள்ளம் கொண்டு நீதி நெறிமுறைகளைச் சொல்லி நல்வழிப்படுத்திய பெரியவர்கள் சாதிப் பெயரை சேர்த்துப் போட்டுக்கொண்டார்கள்.
வ. உ. சிதம்பரம்பிள்ளை
உ. வே. சாமிநாதையர்
இராகவையங்கார்
பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார்
என்பதெல்லாம் சமூகத்தில் தலை சிறந்து விளங்கியவர்களைக் குறிக்க அப்படி வந்தவை.
நமக்குப் புரிதல் இல்லாமல் சாதிப் பெயர்களை மட்டும் அவர்கள் பெயர்களிலிருந்து நீக்கிவிட்டோம்.
அதில் நமக்கு ஏதோ ஒரு திருப்தி.
Comments
Post a Comment
Your feedback