செந்தூர் முருகன் கோவிலிலே
தாமிரபரணி பாயும் திருநெல்வேலிப் பூமி ஸ்ரீவைகுண்டம்.
அந்த ஸ்ரீவைகுண்டம் நகரைச் சேர்ந்தவர்கள் சண்முக சிகாமணிக் கவிராயர் - சிவகாம சுந்தரி அம்மையார் தம்பதியர். குழந்தை வரம் கேட்டு திருச்செந்தூர் முருகனை வழிபட்டு, குழந்தை பாக்கியம் பெற்றனர்.
குழந்தைக்கு ஐந்து வயது ஆனது. அப்போதும் குழந்தை பேசவில்லை. குழந்தை பேசவில்லையே என மனங்கலங்கினர். திருச்செந்தூர் முருகனைத் தவிர வேறு உபாயம் அறியாதவர்கள் அவர்கள்.
நம்பிக்கையோடு திருச்செந்தூர் சென்று 41 நாள் விரதமிருந்தனர். ஆனாலும் குழந்தை பேசவில்லை. “குழந்தை பேசினால் ஊருக்குப் போவோம். இல்லாவிட்டால் முருகா! நீ என்ன முடிவைத் தந்தாலும் சரி” என மீண்டும் விரதத்தைத் தொடர்ந்தனர்.
அன்று 45 ஆவது நாள். செந்திலாண்டவன் சன்னதியில் அமர்ந்திருக்கின்றனர். குழந்தை பேச ஆரம்பித்தது. அந்தக் குழந்தைதான் குமரகுருபரர்.
குழந்தையாக இருக்கும்போது பாடிய முதல் நூல் ‘கந்தர் கலி வெண்பா’ அதில் ‘சரவணபவ’ என்ற மந்திரத்தின் மகிமையைப்
பாடியிருப்பார்.
மதுரை மீனாட்சியம்மனைப் போற்றி ‘மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்’ பாடினார். திருமலை நாயக்க மன்னர் முன்னிலையில் மதுரை
மீனாட்சியம்மன் கோவிலில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம்
ஆரம்பித்தது. அப்போது எங்கிருந்தோ ஒரு
குழந்தை வந்து திருமலை நாயக்க மன்னனின் மடியில் அமர்ந்து கொண்டது. மன்னனும் புன்முறுவலோடு குழந்தையை அணைத்துக் கொண்டான். குழந்தை மன்னனின்
கழுத்திலிருந்த முத்துமாலையை உரிமையோடு எடுத்து,
குமரகுருபரர் கழுத்தில் அணிவித்தது. அரங்கேற்றம் முடிந்த பின் அந்தக் குழந்தை யார் கண்ணிலும் மீண்டும் தென்படவில்லை.
பின்பு ஒரு நாள் காசி சென்றார் குமரகுருபரர். காசியில் மடம் கட்ட சுல்தானிடம் இடம் கேட்க விரும்பினார். சுல்தானுக்கு தமிழ் தெரியாது. இவருக்கோ இந்துஸ்தானி மொழி தெரியாது. மனம் தளராமல் நான் நினைத்த காரியம் சித்தியாக வேண்டும் என சரஸ்வதி தேவியைப் போற்றிப் பத்துப்பாடல்கள் பாடினார். சுல்தான் இவர் விரும்பிய இடத்தைக் கொடுத்தார். அந்த இடத்தில் ‘குமாரசுவாமி மடம்’ அமைக்கப்பட்டது. இன்றும் அவர் பெயரில் உள்ள இந்த மடம் தென்னிந்தியாவில் இருந்து காசிவரும் அடியார்களுக்குச் சேவையாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அவர் பாடிய அந்தப் பாடல்களின் தொகுப்பே ‘சகலகலாவல்லி மாலை’ என்பது.
பிறந்தது முதல் பக்தி நெறியில் திளைத்த குமரகுருபரர் சிதம்பர
மும்மணிக்கோவையில் தன்னைப் பற்றிச்
சொல்கிறார்.
நான் தவத்தில் சிறந்த ஞானியைப் போல வேடம் போட்டுக் கொண்டேன். ஆனால், எனக்குள் பொய், புரட்டு, வஞ்சகம் இவையே நிறைந்திருந்தன.
பின்னர் வடதிசை
சென்றேன். சிவபெருமானின் திருநடனத்தைப்
பார்க்கும்பேறு பெற்றேன். என் பிறவிப்பயனை
அடைந்தேன்.
நான் எந்த முயற்சியும் செய்யாமலேயே எனக்கு அந்தப் பெருமை கிடைத்தது. என்ன காரணம்? ஒரே காரணம் தான் எனக்குத் தெரிகிறது.
பெருமானே! நான் தவறான பழக்கங்களைக் கொண்டிருந்த போதும் உன்னுடைய உண்மையான பக்தர்களோடு பழக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அது மட்டுமல்ல, நான் போட்ட இந்த அடியார் வேடத்தை மக்கள் தினந்தினம் பார்த்தார்கள். அவர்கள் என்னை உண்மையான பக்தன் என்றே நினைத்தார்கள். உண்மையில், அவர்கள் என்னில் உன்னையே பார்த்தார்கள்.
இப்படி அவர்கள் தொடர்ந்து எனக்குள் உன்னைப் பார்த்து வந்ததால், ஒரு கட்டத்தில் அந்தப் பாவனையே உண்மையாகி விட்டதோ! அதனால் தான் எனக்கு இந்தப் பெரும்பேறு கிடைத்ததோ?
குமரகுருபரர் பாடிய சிதம்பர மும்மணிக் கோவை பாடல்
செய் தவ வேடம் மெய்யில் தாங்கி,
கைதவ ஒழுக்கம் உள் வைத்துப் பொதிந்தும்,
வடதிசைக் குன்றம் வாய் பிளந்தன்ன
கடவுள் மன்றில் திருநடம் கும்பிட்டு
உய்வது கிடைத்தனன், யானே உய்தற்கு
ஒரு பெரும் தவமும் உஞற்றிலன், உஞற்றாது
எளிதினில் பெற்றது என் எனக் கிளப்பின்,
கூடா ஒழுக்கம் பூண்டும் வேடம்
கொண்டதற்கு ஏற்ப நின் தொண்டரொடு பயிறலின்
பூண்ட அவ்வேடம் காண்தொறும் காண்தொறும்
நின் நிலை என்னிடத்து உன்னி உன்னிப்
பல்நாள் நோக்கினர் ஆகலின், அன்னவர்
பாவனை முற்றியப் பாவகப் பயனின் யான்
மேவரப் பெற்றனன்போலும்!
Comments
Post a Comment
Your feedback