Skip to main content

நல்ல பேச்சு நடக்குது

இத்தனை நாளாகப் பழகி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இனியும் இப்படியே இருக்க முடியாது. அதனால் முறைப்படி அவள் வீட்டுக்குச் சென்றுபெண் கேட்க முடிவு செய்கிறான்.

இப்படி முறைப்படி பெண் கேட்பதற்காக தன் உறவினரை அவள் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறான். இந்தத் திருமணத்திற்கு அவர்கள் சம்மதிப்பார்களோ சம்மதிக்க மாட்டார்களோ என்று அவளுக்கும் கவலை. அப்படியான சூழலில் பெண் கேட்டு வந்த உறவினர்கள் இதோ வந்துவிட்டார்கள்.

அவர்கள் பெண் கேட்டு வரவிருக்கின்ற செய்தி அந்த பெண்ணின் வீட்டாருக்கு முன்பே சொல்லி அனுப்பப்பட்டிருக்கிறது. அதனால் பெண்ணின் வீட்டில் அந்தப் பெண்ணின் தாய், தந்தை மற்றும் உள்ள நெருங்கிய உறவினர்கள் எல்லோரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவே ஒரு சபை போல இருக்கிறது. பெண் கேட்க வந்தவர்களை அவர்கள் வரவேற்கிறார்கள். பெண்கேட்டு வந்த பெரியவர்களோ "நன்மை உண்டாகட்டும், நன்மை உண்டாகட்டும்" என்று வாழ்த்திக் கொண்டே வந்தார்கள். 

 பெண் வீட்டில் இருக்கிற பெரியவர்களோ அதற்கு மறுமொழியாக "இந்த நாள் எங்களுக்குச் சிறந்த நாள், பெருமை தரும் நல்ல நாள்" என்று பதிலுக்கு வாழ்த்தினார்கள்.

அந்தப் பெண் இதையெல்லாம் தூரத்தில் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவர்கள் பேசுவது ஒன்றும் அவள் காதில் விழவில்லை. அப்பொழுது அவள் மனதிலே ஒரு சந்தேகம். தன்னை அவனுக்கு திருமணம் செய்து கொடுப்பார்களா அல்லது மறுத்து விடுவார்களா என்பது தான் அந்தச் சந்தேகம். இந்தச் சந்தேகம் வந்த அடுத்த நொடியே அவள் மனதில் ஏதோ ஒரு பயம். அவள் முகத்தில் தோன்றுகின்ற இந்த மாற்றத்தைக் கண்ட அவளுடைய தோழி அவளை நெருங்கி வந்து சொல்லத் தொடங்குகிறாள்.

"நான் அந்தப் பக்கமாக சென்று வந்தேன். உன்னைப் பெண் கேட்டு வந்த அவர்களோ பெரிய மனிதர்கள். கையிலே கோல் வைத்திருக்கிறார்கள்.

அவர்களுடைய நரைத்த தலைமுடியே அவர்களின் பழுத்த வாழ்க்கை அனுபவத்தைச் சொல்லும்படி இருக்கிறது. தலையில் தலைப்பாகை அணிந்திருந்தார்கள். வரும்போதே "நல்லது நடக்கட்டும்" என்று மங்கலமாக வாழ்த்திக் கொண்டே வந்தார்கள். நம் வீட்டில் இருக்கின்ற பெரியவர்களோ "நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்ததால் இந்த நாள் எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது" என்று சொல்லி வரவேற்றார்கள். 

 அவர்கள் சொன்ன அந்த நல்ல வார்த்தையும் நம்முடைய வீட்டுப் பெரியவர்கள் சொன்ன மறுமொழியையும் கேட்கும்போதே இதெல்லாம் நல்லது நடப்பதற்கான அறிகுறிகளாகவே எனக்குப்படுகிறது. நம்ம ஊரிலும் பிரிந்திருப்பவர்களைச் சேர்த்து வைக்கின்ற நல்லவர்கள் இருக்கிறார்கள். ஆகவே உன் சந்தேகத்தை விரட்டி விடு. உறுதியாக இந்தத் திருமணப் பேச்சு நல்லபடியாக நடக்கும்"

என்று கூறுகிறாள் தோழி.


இன்றைக்கு நடக்கும் திருமணப் பேச்சு அந்த இரண்டாயிரம் வருடத்துக்கு முன்பிருந்த அதே அனுபவத்தைப் பேசுவது வியப்பான ஒரு செய்தி.

1.திருமணப் பேச்சு என்றாலே அந்தந்தக் குடும்பத்தில் உள்ள தன்மையான பெரியவர்கள் கலந்து பேசுவது.

2.பெண் கேட்க வரும்போது தேர்ந்தெடுத்த நல்ல வார்த்தையை சபையறிந்து பேசுவது.

3. அதற்கு இணக்கமான நல்ல மறுமொழி சொல்வது.

4. இன்றும் "நல்லது" என்று மங்கலமாகத் தொடங்குவது. "நல்லது" என்பதை அடுத்தே பேச்சைத் தொடங்குவது.

5. உள்ளத்தில் உள்ள மகிழ்ச்சியை நிறைவாக வெளிப்படுத்த வயது முதிர்ந்த பெரியவர்கள் இருப்பது.

இப்படி, வழிவழியாக வந்த நல்ல மரபு இன்டர்நெட் காலத்திலும் மாறாமல் தொடர்வது ஆச்சரியத்தைத் தருகிறது. 

அது தான் பண்பாட்டின் வலிமை. 

அம்ம வாழி தோழி நம்மூர்ப்

பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ

தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்

நன்றுநன் றென்னு மாக்களோ

டின்றுபெரி தென்னும் ஆங்கண தவையே. 

(வெள்ளி வீதியார் - குறுந்தொகை)


சொல்லும் பொருளும்:

புணர்ப்போர் - திருமணம் கைகூட வைப்பவர்கள்

தண்டு - கைத்தடி, ஊன்றுகோல்

வெண்டலை - நரைத்த தலை 

சிதவல் - தலையில் அணியும் துண்டு 

மாக்கள் - வந்த பெரியவர்கள் 

ஆங்கண் - அங்கே

கொல் - பொருள் இல்லாத சொல் (இலக்கணத்தில் அதை அசை என்று சொல்லுவார்கள்)

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...