Skip to main content

நலம் வாழ நான் பாடினேன்

 

சிலப்பதிகாரம் என்ற பெருங்காப்பியத்தை நிறைவு செய்யும்போது அதுவரை படித்த ஒவ்வொருவருக்கும் அடிகளார் கூறும் அறவுரை இது. அரசவாழ்வைத் துறந்து அறவாழ்வை மேற்கொண்டவர் இளங்கோவடிகள் என்பதையும் நினைவில் கொண்டால் ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னும் உள்ள சத்தியத்தை ஓரளவு நம்மால் உணரமுடியும்.

 

நான் பாடக் கேட்ட நலம் சான்ற பெருந்தகையோரே! 

 

கவலையிலிருந்தும், துன்பத்திலிருந்தும் பாங்காக விடுபடுங்கள். 

தெய்வம் இன்னதெனத் தெளிவு பெறுங்கள். 
இத்தகைய தெளிவு பெற்றவர்களைப் போற்றிக்கொண்டு வாழுங்கள். 
பொய் சொல்வதற்கு அஞ்சுங்கள். 

பிறர்மேல் பழி சுமத்தாதீர்கள். 
புலால் உண்ணாதீர்கள். 
உயிரைக் கொலை செய்யும் தொழிலை விட்டுவிடுங்கள். 
தானம் செய்யுங்கள். 
தவ நெறியை மேற்கொள்ளுங்கள். 
பிறர்  செய்த உதவியை அழித்துவிடாதீர்கள். 
தீயவரோடு நட்புக் கொள்வதை இகழ்ச்சியாக எண்ணுங்கள். 
பொய் சாட்சி சொல்லாதீர்கள். 
உண்மை கூறும் வாழ்கையை விட்டு நீங்காதீர்கள். 
அறநெறியாளர் அவையை விட்டு நீங்காமல் இருங்கள். 
பிறன் மனைவியைக் கண்டால் அஞ்சுங்கள். 
தப்பிப் பிழைத்து வாழும் உயிர்களைக் காப்பாற்றுங்கள். 
அறம் செய்யும் இல்லறத்தைக் காப்பாற்றுங்கள். 
அறம் அல்லாத செயல்களை விலக்கிவிடுங்கள். 
கள்ளுண்ணல், களவு செய்தல், காமச் செயல், பொய் சொல்லுதல், பயனற்ற சொற்களைப் பேசுதல் ஆகியவற்றை விலக்கிவிடுங்கள். 

இளமை, செல்வம், உடம்பு ஆகியவை நிலையில்லாதவை.

அதனால் இருக்கும்வரையில் செல்லுமிடமெல்லாம் பிறருக்குத் துணையாக இருந்து அவர்களின் துணையைத் தேடிக்கொள்ளுங்கள். 
இப்படி, வளம் மிக்க இந்த உலகத்தில் வாழ்வாங்கு வாழ்வீர்களாக.

 

 

பரிவும் இடுக்கணும், பாங்குற, நீங்குமின்;
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்
பொய் உரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊன் ஊண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்ம்மின்; தவம் பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீ நட்பு இகழ்மின்;
பொய்க் கரி போகல்மின்; பொருள்-மொழி நீங்கல்மின்;
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
பிறர் மனை அஞ்சுமின்; பிழை உயிர் ஓம்புமின்;
அற மனை காமின்; அல்லவை கடிமின்;
கள்ளும், களவும், காமமும், பொய்யும்,
வெள்ளைக் கோட்டியும், விரகினில், ஒழிமின்
இளமையும், செல்வமும், யாக்கையும், நிலையா
உள நாள் வரையாது ஒல்லுவது ஒழியாது;
செல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடுமின்-
மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு-என்,




 


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...