பாரதியார் புதுச்சேரியில் இருந்த காலத்தில் தினமும் காலையில் சில மைல் தொலைவில் உள்ள ஒரு மடுவுக்கு குளிக்கப் போவார். பாரதியாரோடு குவளைக் கண்ணனும் எப்போதும் கூடவே போவார். போகும் வழியில் தென்னந்தோப்புகள் வயல்கள் வழியாக நடந்து செல்வார்கள்.
ஒருநாள் பாரதி
குவளைக்கண்ணன் வீட்டுக்குச் சென்று "மடுவுக்குப் போகலாம் வா" என
அழைத்தார். விடியற்காலைப் பொழுதில் வந்த பாரதியை அன்றுதான் முதன்முதலாகக் கண்டார்
குவளைக் கண்ணனின் தாயார்.
"அம்மா! பாட்டுப் பாடுவார்
என்று சொல்வேனே , அந்தப் பாரதி இவர் தாம்மா" என்று தன் தாயாருக்கு பாரதியை
அறிமுகப்படுத்தினார் குவளைக்கண்ணன்.
பாரதியாரை
வீட்டிற்குள் அழைத்துச் சென்ற கண்ணனின் தாயார் "ஒரு சுப்ரபாதம்
பாடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். "சுப்ரபாதம் என்றால் என்ன?"
என்று பாரதியார் திருப்பிக் கேட்டார். சுப்ரபாதம் கூட தெரியவில்லையே பாரதிக்கு என
குறைப்பட்டுக் கொண்டார் அவர்.
பிறகு கண்ணனோடு
பாரதி மடுவுக்குப் புறப்பட்டார். "சுப்ரபாதம் என்றால் என்ன?" என்று
மறுபடியும் பாரதி கண்ணனைக் கேட்டார். "சுப்ரபாதம் என்பது சமஸ்கிருதம்.
தமிழில் திருப்பள்ளிஎழுச்சி திருப்பாவை, திருவெம்பாவை" என கண்ணன் கூறினார்.
கூறியதோடு ஒரு திருப்பள்ளி எழுச்சிப் பாடலையும் பாடிக் காட்டினார்.
மறுநாள் அதுபோலவே பாரதமாதாவுக்கு ஒரு திருப்பள்ளியெழுச்சி பாடினார் பாரதி. பாடிப் பார்த்த பின்பு நேராக குவளைக்கண்ணன் தாயாரிடம் சென்றார். பாரத மாதா திருப்பள்ளி எழுச்சியை முதன்முதலாக அவரிடம் பாடிக்காட்டினார். அவரோ ஆச்சரியத்தில் உறைந்து விட்டார்.
அந்தத் திருப்பள்ளியெழுச்சி பாடல் தான் இது.
பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால்,
புன்மை யிருட்கணம் போயின யாவும்,
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி,
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன்
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே
வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே!
புள்ளினம் ஆர்த்தன! ஆர்த்தன முரசம்,
பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம்
வெள்ளிய சங்கம் முழங்கின, கேளாய்!
வீதியெ லாம்அணு குற்றனர் மாதர்!
தெள்ளிய அந்தணர் வேதமும்
நின்றன்
சீர்த்திரு நாமமும் ஓதி நிற் கின்றார்,
அள்ளிய தெள்ளமு தன்னை எம் அன்னை!
ஆருயிரே! பள்ளி யெழுந்தரு ளாயே!
பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம்,
பார்மிசை நின்னொளி காணுதற்கு அளந்தோம்,
கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே
கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்
சுருதிகள் பயந்தனை! சாத்திரம் கோடி
சொல்லரு மாண்பின ஈன்றனை, அம்மே!
நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்றாய்!
நிர்மலையே! பள்ளி யெழுந்தரு ளாயே!
நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்
நெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ?
பொன்னனை யாய்! வெண் பனிமுடி யிமயப்
பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே!
என்ன தவங்கள் செய்து எத்தனை காலம்
ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே?
இன்னமும் துயிலுதி யேல்இது நன்றோ?
இன்னுயிரே? பள்ளி யெழுந்தரு ளாயே!
மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ?
மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ?
குதலைமொழிக்கிரங் காதொரு
தாயோ?
கோமகளே! பெரும் பாரதர்க் கரசே!
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய்
இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்!
ஈன்றவளே! பள்ளி யெழுந்தரு ளாயே!
Comments
Post a Comment
Your feedback