என்ன ஏது என்று தெரியாமல் அவன் நினைவாகவே எப்போதும் இருக்கிறேன்.
எப்போதும் தனிமை...
எனக்குப் பிடிக்கும் என எல்லோருக்கும் தெரிந்ததெல்லாம் கூட இப்போது எனக்குப் பிடிக்காமல் போய் விட்டது.
யாரைப் பார்த்தாலும் சலிப்பு.
கூப்பிட்டது அம்மா தான் என்று தெரியும். ஆனாலும் முன்பு போல ஓடிப் போய் கேட்பதில்லை.
பேச, பழக இருந்த யாரையும் பிடிக்காமல் போய்விட்டது.
ரசித்து ருசித்த உணவெல்லாம் இப்போது வேண்டாதவை ஆகிவிட்டன.
தூக்கம் எங்கோ தொலைந்து போய்விட்டது.
பூ வாசம் எல்லாம் பிடித்தது எனக்கு.
இப்போதோ...
பூவும் எனக்குப் பிடிப்பதில்லை ...
வாசமும் முன்பு போல என்னை வசீகரிக்கப்பதில்லை.
என்ன செய்கிறேன் என்றே தெரியாமல் என்னென்னவோ செய்து வைக்கிறேன்.
துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த என்னை எங்கோ தொலைத்து விட்டு நிற்கிறேன்.
எனக்கு வந்திருப்பது காதல் வியாதி.
அது தெரியாமல் நாடி பார்த்த வைத்தியர்கள் எல்லாம் "தப்பிப்பது கஷ்டம்" என்று கையை விரித்து விட்டுப் போய்விட்டார்கள்.
இனி வேறு வழியில்லை. பாலத்துச் சோசியர் தான் சரி என்று சொன்னார்கள்.
வந்து பார்த்த சோசியர் "இது கிரகம் படுத்தும் பாடு. அது நடந்து தான் தீரும்" என்று சொல்லிக் கிளம்பிப் போய்விட்டார்.
என்னைக் களவாடிக்கொண்டு போன அவன் ஒரு நாள் கனவில் வந்து என்னைத் தொட்டுஎழுப்பி விட்டான்.
"ஏன் இப்படி " என அவனிடம் கேட்க வேண்டும் என்று எத்தனிக்கும் போதே எங்கோ காணாமல் போய்விட்டான்.
ஆனாலும் என் மனதுக்குள் மகிழ்ச்சி பொங்கி வந்தது.
உள்ளமெல்லாம் குளிர்ந்து போனது.
உடம்பெல்லாம் முன்பு போல துடிப்பானது.
பார்ப்பதெல்லாம் அழகாகத் தெரிந்தன.
எங்கு எதைத் தொட்டாலும் அவன் என்னைத் தொட்டது போலவே இருந்தது.
மனது அமைதியை ஆனந்தமாக அனுபவித்தது.
யார் தான் அவன் என்று போசித்துக் கொண்டே இருந்தேன்.
அந்த முகம் என் கண் முன் வந்தது.
யார் அவன் என்று கண்டு கொண்டேன்.
கண்முன் நான் கண்டது கண்ணன் முகம்.
தன்னைப் பெண்ணாகவும் கண்ணனைத் தன் காதலனாகவும் கண்டு திளைத்த பாரதியின் அனுபவம் இது.
தூண்டிற் புழுவினைப்போல் ---
வெளியே சுடர்விளக்கினைப் போல் ,
நீண்ட பொழுதாக-- எனது நெஞ்சந்துடித்ததடீ!
கூண்டுக்கிளியினைப்போல் --தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன் ;
வேண்டும் பொருளையெல்லாம்--
மனது வெறுத்து விட்டதடீ!
பாயின்மிசை நானும் --தனியே படுத்திருக்கையிலே, தாயினைக்கண்டாலும்,--சகியே! சலிப்பு வந்ததடீ!
வாயினில் வந்ததெல்லாம் ,--சகியே! வளர்த்துப் பேசிடுவீர்; நோயினைப்போலஞ்சினேன் ;--சகியே!
நுங்களுறவையெல்லாம் . உணவு செல்லவில்லை ;--சகியே!
உறக்கங் கொள்ளவில்லை.
மணம் விரும்பவில்லை;--சகியே! மலர் பிடிக்கவில்லை;
குணமுறுதி யில்லை ;--எதிலும் குழப்பம் வந்ததடீ !
கணமும் உள்ளத்திலே --சுகமே காணக் கிடைத்ததில்லை.
பாலுங் கசந்ததடீ!--சகியே! படுக்கை நொந்ததடீ!
கோலக்கிளி மொழியும் --செவியில் குத்தலெடுத்ததடீ !
நாலு வயித்தியரும் --இனிமேல் நம்புதற்கில்லைஎன்றார்;
பாலத்துச் சோசியனும் --கிரகம் படுத்துமென்றுவிட்டான்
கனவு கண்டதிலே-- ஒருநாள் கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்கவில்லை --எவனோ என்னகந் தொட்டுவிட்டான் .
வினவக் கண் விழித்தேன் ;--
சகியே! மேனி மறைந்து விட்டான்;
மனதில் மட்டிலுமே --புதிதோர் மகிழ்ச்சி கண்ட தடீ !
உச்சி குளிர்ந்ததடீ;--சகியே! உடம்பு நேராச்சு ;
மச்சிலும் வீடுமெல்லாம் --முன்னைப்போல்
மனத்துக் கொத்ததடீ! இச்சை பிறந்ததடீ!--
எதிலும் இன்பம் விளைந்ததடீ! அச்சமொழிந்ததடீ!--சகியே!
அழகு வந்ததடீ!
எண்ணும் பொழுதிலெல்லாம் --அவன்கை இட்ட விடத்தினிலே தண்ணென்றிருந்ததடீ!
--புதிதோர் சாந்தி பிறந்ததடீ!
எண்ணி எண்ணிப் பார்த்தேன்;--அவன்தான் யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் --அஙகே கண்ணின் முன் நின்றதடீ
Comments
Post a Comment
Your feedback