பெற்ற தாய் தனை மக மறந்தாலும்...
உற்ற தேகத்தை உடல் மறந்தாலும்...
எனும் ராமலிங்க அடிகளாரின் பாடலை பாடிக் கொண்டிருந்தார் மறைமலை அடிகளார்.
அப்போது தேகம் என்பது தமிழ்ச்சொல் அல்லவே என்று தோன்றியது அவருக்கு.
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்...
உற்ற யாக்கையை உடல் மறந்தாலும்...
என்று சொல்லிப் பார்த்தார்.
தேகம் என்ற வடமொழிச் சொல் நீங்கி, யாக்கை எனும் தூய தமிழ் சேரும் என்பதால் மகிழ்வுற்றார்.
அந்த தினத்திலிருந்து வேற்று மொழி கலவாமல் தமிழ் பேசுவோம் என்று தன் குடும்பத்தாரிடம் கூறினார். இதுவே, அவரது தனித்தமிழ் இயக்கம் என்ற சிந்தனையின் முதல் பொறி.
சுவாமி வேதாச்சலம் என்ற தனது பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார்.
தமிழர்கள் அனைவரும் கலப்படமின்றி தமிழ் பேச கடப்பாடு கொண்டால் நல்ல நல்ல புதிய சொற்கள் கிடைப்பதோடு இன்று இருக்கும் நல்ல சொற்கள் பயன்பாட்டில் இல்லாமல் போவது தடுக்கப்படும் என்று நினைத்தார்.
தமிழ்ச் சொற்களின் பயன்பாடு குறித்த கவலை வெகு சிலருக்குத் தான் இருந்திருக்கிறது. அந்த வெகு சிலரில் நிச்சயமாக மறைமலை அடிகளும் ஒருவர்.
1876-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் நாள் நாகப்பட்டினத்திற்கு அருகே அமைந்துள்ள காடம்பாடி எனும் சிற்றூரில் பிறந்தவர் மறைமலை அடிகள். இவரது பெற்றோர் சொக்கநாத பிள்ளை, சின்னம்மாள். பெற்றோர் அவருக்கு இட்ட இயற்பெயர் வேதாசலம்.
பெரியவரானதும் அவர் சைவ சமய சொற்பொழிவுகளை ஆற்றி வந்ததால் சுவாமி வேதாசலம் என்று அவரை அழைத்தனர் பொதுமக்கள்.
வெஸ்லியன் மிஷன் என்ற கிறிஸ்துவப் பள்ளியில் தொடக்கக் கல்வியைக் கற்றார் மறைமலை அடிகள். அங்கு ஆங்கிலம் முதல் மொழியாக இருந்ததால் ஆங்கிலத்தை நன்கு கற்றுத் தேர்ந்தார்.
வே. நாரயணசாமி பிள்ளை என்பவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்றுக் கொண்டார். அதோடு நின்று விடாமல் சமஸ்கிருத மொழியையும் நன்கு கற்றறிந்தார். எனவே அவருக்கு மூன்று மொழிகளில் புலமை இருந்தது.
தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருந்த தனியாத தாகத்தால் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, பதினெண்கீழ்க்கணக்கு போன்ற நூல்களையும் தெளிவாகக் கற்றுத் தேர்ந்தார்.
சிறு வயதிலிருந்தே தன்னோடு பழகி வந்த செளந்தரம் என்ற பெண்ணை மணந்து கொண்டு ஏழு பிள்ளைகளுக்கு தந்தையானார் மறைமலை அடிகள்.
நாகை மீனலோசனி என்ற செய்தித்தாளுக்கு தகவல் சேகரித்துக் கொடுக்கும் பணியை அவர் மேற்கொண்டார்.
சைவ சித்தாந்தத்தில் பெயர் பெற்ற சோமசுந்தர நாயக்கரின் சொற்பொழிவுகளைப் பாராட்டி அந்த பத்திரிகையில் அவர் கட்டுரைகள் எழுதினார். அவற்றைப் படித்து ரசித்த நாயக்கருக்கு அவருடைய எழுத்தின் மீது ஈடுபாடு ஏற்படவே சித்தாந்த தீபிகை என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியப் பணியில் மறைமலை அடிகளை அமர்த்தினார். அந்தப் பணியை விருப்பமுடன் செய்த அதே வேளையில் தமிழாசிரியராக வர வேண்டும் என்ற தமது விருப்பத்துக்காகவும் உழைத்தார் மறைமலை அடிகள்.
தமிழாசிரியர் பணித் தேர்வுக்கு தம்மை தயார் செய்து கொண்டார். அந்தப் பணிக்காக நடைபெற்ற நேர்முகத் தேர்வில் மறைமலை அடிகளின் புலமையை சோதித்தவர் அப்போது புகழ் பெற்றிருந்த பரிதிமார் கலைஞர் என்ற தமிழறிஞர்.
மறைமலை அடிகளின் புலமை அவருக்கு தமிழாசிரியர் பணியைப் பெற்றுத் தந்தது. மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
பின்னர் சொந்தமாக இதழ் நடத்த விரும்பிய மறைமலை அடிகள் 1902-ஆம் ஆண்டு ஞானசாகரம் என்ற பத்திரிகையைத் தொடங்கினார். அதன் பெயரை பின்னர் அழகு தமிழில் 'அறிவுக்கடல்' என்று மாற்றினார்.
ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் தமிழில் பரவிக் கிடந்ததை உணர்ந்து வருந்திய மறைமலை அடிகள் கலப்படத்திலிருந்து தமிழை மீட்கவும், தனித்தமிழில் பேசவும், எழுதவும் தமிழர்களுக்கு ஊக்கமூட்ட முடிவெடுத்தார்.
வெறும் பேச்சோடு நின்று விடாமல் அதற்கு ஒரு முன்னுதாரணமாக செயல்படத் தொடங்கினார். தனித்தமிழ் இயக்கத்தை நிறுவினார். அப்போதுதான் தன் பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார். அவரைப் பின்பற்றி பல தமிழர்கள் தங்களுக்கு தூய தமிழில் பெயர் சூட்டிக் கொண்டனர்.
முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை போன்ற நூல்களுக்கு எளிமையான தமிழில் உரை எழுதினார். கடுமையான தமிழாக இல்லாமலும், கலப்புத் தமிழாக இல்லாமலும் எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தூயதமிழை அவர் பயன்படுத்தினார்.
வடமொழியில் காளிதாசன் படைத்த சாகுந்தலா எனும் காதல் காவியத்தை தமிழில் மொழி பெயர்த்தார்.
தமிழ், தமிழ் என்று மட்டும் அவர் கண்மூடி வாழவில்லை. ஆங்கில மொழி அறிவும் அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். ஆங்கிலத்தில் உள்ள நல்ல நூல்களைப் படித்தறியவும், நல்ல தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும் ஆங்கில அறிவு அவசியம் என்று அவரே கூறியிருக்கிறார்.
தனித்தமிழ் இயக்கத்தின் காரணமாக அந்தக்கால கட்டத்தில் வழக்கத்திலிருந்த நமஸ்காரம், ஜலம், சந்தோஷம், அபேட்சகர் போன்ற வடமொழி சொற்கள் முறையே வணக்கம், நீர், மகிழ்ச்சி, வேட்பாளர் என்றாயின.
தமிழையே உயிர் மூச்சாக சுவாசித்த அவர் தம் வாழ்நாளில் மொத்தம் 56 நூல்களை எழுதினார். அவருக்கு கடவுள் பக்தி நிறைய இருந்தாலும் முற்போக்கு சிந்தனையும் அதிகமாக இருந்தது. தம் வாழ்நாளில் அவர் உயிராக மதித்தது இரண்டு. ஒன்று தமிழ், மற்றொன்று மனைவி செளந்தரம். எனவே மனைவி இறந்த சில மாதங்களிலேயே பிரிவைத் தாங்காமல் அவரும் மரணத்தைத் தழுவினார்.
கடைசி வரை தமிழுக்காக உழைத்த மறைமலை அடிகள் 1950-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் நாள் தமது 75-ஆவது வயதில் காலமானார்.
Comments
Post a Comment
Your feedback