Skip to main content

Posts

Showing posts from June, 2022

நாங்கள் எளிய குடும்பம். நீயோ....

என் தோழியோ ஏழைப் பரதவர் மகள். நீலக்கடலின் உள்ளே சென்று மீன் கொண்டுவரும் எளிய குடும்பம். கடலை அடுத்திருக்கிற கானல்துறையில் உள்ள சிறுகுடியில் வாழ்கிறோம். நீயோ, கொடி பறக்கும்  தேரில் செல்லும் செல்வம் படைத்த பெருமகனின் மகன்.   திரும்பிய பக்கமெல்லாம் கடைத்தெருக்கள் கொண்ட பழமையான ஊரில் நீ வசதியாக வாழ்கிறாய். நாங்களோ, சுறாமீன் துண்டங்களைக் காயவைத்துக்கொண்டு, அதனைக் கொத்திப் போக வரும் பறவைகளை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.  எங்களுக்காக நீ இத்தனை அழகிய அணிகலன்களைக் கொண்டு வந்திருக்கிறாய். எங்கள் கை பட்டாலே அதன் அழகு மாசுபடும். இங்கே புலால் நாற்றம் அடிக்கிறது. நீ கொஞ்சம் தள்ளியே நில்.  கடலில் கிடைத்ததைக்கொண்டு வாழும் எங்களின் இந்த வாழ்க்கை எங்களுக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் உனக்கு இந்த வாழ்க்கை ஒத்துவராது. நாங்கள் எங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடியாது. உன் பெருமைக்கும் வசதிக்கும் எங்கள் வாழ்க்கை பொருந்தாது. இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி, நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்கு மீன் எறி பரதவர் மகளே; நீயே, நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க் கடுந் தேர்ச் செல்வன் க...

நல்லதா நாலு வார்த்தை -2

 கோபம் உறவுகளைச் சீர்குலைக்கும். எவ்வளவு பெரிய ஒழுக்கசீலராக இருந்தாலும் எல்லா நேரமும் பிறாண்டிக்கொண்டிருப்பவரை சொந்தக் குழந்தைகளே அண்டப் பயப்படுவார்கள். சொல்வதை கோபப்படாமல் சொல்லத்தெரிந்து கொள்ளுதல் மனிதர்களைச் சம்பாதித்துக் கொடுக்கும். எல்லாவற்றையும் மாற்ற நினைப்பதை விட எல்லாவற்றையும் ஏற்க நினைப்பது தான் மனநலத்தைப் பேணும். (Dr.R.Karthikeyan)

நல்லதா நாலு வார்த்தை...1

  யோசித்துப் பார்த்தால்...  வெற்றியும் தோல்வியும் அவரவர் மதிப்பீடு சார்ந்தவை. வாழ்க்கையில் எதை நோக்குகிறோமோ அது கிடைத்தால் வெற்றி. அது தவறினால் அல்லது தாமதமானால் அதை தோல்வி என்று சொல்கிறோம். எந்தத் தோல்வியும் பெரிதல்ல. அதைப் பூதாகரமாக்கிவிடுவது நம் எண்ணங்கள் தான். அந்தந்தப் பருவத்தில் பெரிதாகத் தெரியும் தோல்விகள் காலமும் தூரமும் கடந்து நோக்குகையில் அற்ப விஷயமாகத் தெரியும். மதிப்பெண்கள் குறைவது போன்றவை அந்தந்தக் காலத்தில் வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைப்பவை. ஆனால் அதைக் கடந்தும் வாழ்க்கை ஓடும். அதைவிட சிறப்பான நிகழ்வுகளும் வாய்ப்புகளும் வாய்க்கும். நாளை பற்றிய நம்பிக்கை தான் நேற்றைய காயங்களுக்கு மருந்து. (Dr.R. Karthikeyan)

என் அன்பு வயிறே!

  ஒரு நாள் சாப்பிடாமல் இருந்துவிடலாம் என்றால் ஒத்துக்கொள்ளமாட்டேன் என்கிறாய். போகும் இடத்தில் எங்கும் சாப்பிட முடியாது. அதனால் இரண்டு நாளைக்கு சேர்த்துச் சாப்பிட்டு விடலாம் என்றால் அதுவும் உன்னால் முடிவதில்லை. போகிற இடத்துக்கெல்லாம் உன்னைக் கூட்டிக்கொண்டு போகவேண்டியிருக்கிறது. என் வயிறே! உன்னோடு வாழ்வது எனக்குக் கொடுமையாக இருக்கிறது. ஒருநாளும் நீதரியாய் உண்ணென்று சொல்லி இருநாளைக் கீந்தாலும் ஏலாய் – திருவாளா! உன்னோடு உறுதி பெரிதெனினும் இவ்வுடம்பே! நின்னோடு வாழ்த லரிது.  (முனைப்பாடியார் - அறநெறிச்சாரம்) 

பாசமா? வீரமா?

வீரம், புகழ் என்பதெல்லாம் இந்தச் சமூகம் சொல்லிக்கொடுத்தவை.  இறந்தாலும் புகழோடு இறந்திருக்கிறான் என்றால் அந்த இறப்பிலும் தமிழ்ப் பெண்கள் மகிழ்ந்தார்கள் என்பது அப்படிச் சொல்லித்தரப்பட்ட ஒன்று. ஆனால் ஒரு தாய்க்குத் தான் தெரியும் தன் குழந்தையின் பிரிவு எவ்வளவு வலி தரும் என்று. தாய்மை உணர்வுக்கும் சமூகம் சொல்லித் தந்த நெறிகளுக்கும் நடுவில் சிக்கிக் கொண்ட ஒரு தாயின் வலி இந்தப் பாடலில்... அந்தத் தாய் கொஞ்சம் வயது முதிர்ந்தவள்.  மீன் பிடிக்க வரும் கொக்கு மாதிரி அவள் தலை முடி வெளுத்திருக்கிறது.  அவள் மகன் போர்க்களத்தில் ஒரு எதிரி யானையைக் கொன்றுவிட்டு வீர மரணம் அடைந்தான் என்ற செய்தி வருகிறது. அவளுக்கு சமூகம் சொல்லித் தந்த படி அவனைப் பெற்றபோது மகிழ்ந்ததை விட மிகவும் மகிழ்ச்சி கொண்டாள். ஒரு வினாடி தான்... அடுத்த வினாடி அவள் கண்களில் கண்ணீர். மழை பெய்யும்போது மூங்கில் இலைகளின் நுனியிலிருந்து சொட்டுச் சொட்டாக விழும்   நீர்த்துளிகள் போலக் கண்ணீர்த் துளிகள்... ஓ.. என வாய்விட்டுக் கூட அழ முடியாதபடி தன் மகனின் மரணத்தில் ஒரு தாய் மகிழ வேண்டும் என்பது அந்தத் தாய்க்கு எவ்வளவு க...

யாரிடம் சொல்ல?

யாரிடம் எதைச் சொல்வது என்பதில் தெளிவு இருந்துவிட்டால் அது ஒரு பிரச்சினையை எளிதாகத் தீர்க்கும் வழியாகிவிடும். அதே நேரத்தில் எல்லோரிடமும் எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள்.  எதையாவது சொல்லவேண்டும் என்பது தான் அவர்கள் எண்ணமே தவிர பிரச்சினைக்கு தீர்வை விரும்பி அவர்கள் சொல்வதில்லை.  வீட்டுக்கு வருவோர் போவோரிடம் "எனக்கு இங்கே வலிக்கிறது அங்கே வலிக்கிறது, நடந்தால் மூச்சு வாங்குகிறது" என்று விலாவாரியாக  விளக்கம் சொல்கிறோம்.  ஆனால், அந்த நோயைத் தீர்க்கும் வழிவகை தெரிந்த மருத்துவரிடம் போகும்போது சொல்லமறந்து விட்டுவிடும் விஷயங்கள் உண்டு. இவரிடம் சொன்னால் தீர்வு வரும் என்றுதெரிந்தால் அவரிடம் முழுமையாகச் சொல்லவேண்டும்.  இவரிடம் சொல்லி என்ன பிரயோசனம் என்று நினைத்தால் அவரிடம்  எதையும் சொல்லக்கூடாது. எதை எங்கு சொல்வது என்பது ஒரு வாழ்வியல் கலை. தெற்றப் பரிந் தொருவர் தீர்ப்பர்எனப் பட்டார்க்கு உற்ற குறையை உரைப்பதாம் - தெற்ற அறையார் அணிவளையாய்! தீர்தல் உறுவார் மறையார் மருத்துவர்க்கு நோய். (பழமொழி)

குறுந்தொகையில் ஆண் பெண் உறவு நிலைகள்

குறுந்தொகையில் ஆண் பெண் உறவு நிலைகள்     தொன்மைச் சிறப்பும் இலக்கிய வளமுமுள்ள மொழி தமிழென்ற   பெருமைக்குரிய தகுதிக்கு பாட்டும் தொகையும் இன்றியமையாதவை. ஈராயிரம் ஆண்டுத் தொன்மையும் அக இலக்கியங்களில் முதன்மையானதுமானது குறுந்தொகை. ஓர் இனத்தின் பண்பாட்டையும் பழக்கவழக்கங்களையும் மரபு சார் நம்பிக்கைகள், வரலாற்றுப் பதிவுகள், சமூக நிலை ஆகியவற்றையும் புற இலக்கியங்கள் வழி அறியக் கிடைக்கின்றன.  கூற்றுகளில் ஆண் பெண் : அக இலக்கியங்களில் உள்ள பாடல்கள் தலைவன் தலைவி தோழி அல்லது பிற மாந்தர்களுள் ஒருவரது கூற்றாக அமைந்திருக்கும். அல்லது பாடல் சுட்டும் செய்தி, பின்புலம், கூறப்படும் உவமைகள், காட்டப்படும் உள்ளுறை வழி யாருடைய கூற்று என அறிந்து கொள்ளமுடியும். குறுந்தொகைப் பாடல்களுள்   தலைவன், தலைவி, தோழி, பரத்தை, இற்பரத்தை, காதற்பரத்தை, செவிலித்தாய், பாங்கன், கண்டோர் என ஒன்பதின்மருடைய கூற்றுக்கள் வந்துள்ளன. இதில் தலைவன், பாங்கன் என்னும் இருவர் மட்டும் ஆண்பாலாக   இருக்க தலைவி உள்ளிட்ட எண்மர் பெண்பாலாக அமைந்துள்ளது அக்கால சமூகத்தின் ஆண், பெண் ஆதிக்கம், பெண்ணுரிமை ...

சொந்தக்காரர்கள் வர வேண்டும்

  கருவுற்றிருக்கும் காலத்தில் ஒரு பெண்ணின் உடலில் தோன்றும் மாற்றத்தைக் குறித்த சிந்தனைகளும் குழந்தையைச் சுமக்கும் போது இருக்கும் சிரமமும்    பிரசவத்தின் போது உண்டாகும் வலியும் தன் குழந்தையைத் தன் மடியில் காணும்போது ஒரு பெண்ணுக்கு மறந்துவிடுகிறது; மகிழ்ச்சி வந்துவிடுகிறது. உடல்நலம் சரியில்லாத போது  தன் சுற்றத்தார் வந்து பார்த்து  ஆறுதல் கூறும்போதும் அப்படித்தான். குழந்தை முகத்தைப் பார்த்த தாய் போல நமக்கு மகிழ்ச்சி வந்துவிடுகிறது.  வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும் கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தா அங்கு அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன் கேளிரைக் காணக் கெடும்.  (நாலடியார்)

கரும்புப் பூ வாழ்க்கை

 பூக்கள் அழகு தான்.  பூக்களுக்கு அழகு வண்டுகளை வரவழைக்கும் அதன் மணமும் அது தரும் தேனும் தான்.  குதிரையின் பிடரி மயிர் போன்ற அழகிய தோற்றம் கொண்டது  கரும்புப் பூ. ஆனால்,  அதற்கு மணமும் இல்லை, தருவதற்கு தேனும் இல்லை.  பணமும் காசும் கொட்டிக் கிடந்தும் யாருக்கும் எந்தப் பயனும் இல்லாமல் தன்னுடைய  செல்வச் செழிப்பிலும், வெற்று ஆடம்பரத்திலும்  பெருமைப்பட்டுக் கொண்டு வாழ்பவர்கள் அந்தக் கரும்புப் பூப் போன்றவர்கள். தோற்றம் மட்டும் தான் கம்பீரம். எதற்கும் யாருக்கும் பயன்படாமல் போவது தான் அவர்கள் வாழ்க்கை. கரும்புப் பூ கரும்புக்கே வேண்டாத சுமை தான். அந்தப் பூவால் என்ன பயன் அதற்கு?   கொடுக்கும் மனம் இல்லாத ஒவ்வொருவரும் இந்தப் பூமிக்கும் அப்படித்தான். தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலரி தேங்கமழ் நாற்றம் இழந்தா அங்கு - ஓங்கும் உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர்பொறிக்கும் பேராண்மை இல்லாக் கடை.    (நாலடியார்)

நான் மட்டும் உறங்கவில்லை...

அவன் தூங்குவானா?   இல்லை நான் மட்டும் தான் இப்படியா?   என்று தெரியவில்லை. அவன் சங்கு முழங்கும் தமிழ்நாடன்.  எல்லாக் காலத்திலும் பொங்கும் கடல் உறங்குவதில்லை. அவன் நினைவில் எப்போதும்... என் பொழுது  விடிவதில்லை. நிலா உறங்குகிறது. பறவைகள் உறங்குகின்றன. தென்றலும் கூட சிலகாலம் உறங்குகிறது. இரவு வேளையில் ஊரெல்லாம் உறங்குகிறது.  என் கண்கள் இரண்டு மட்டும் இரவெல்லாம் உறங்குவதில்லை. சங்கு முழங்கும் தமிழ்நாடன் றன்னை நினைத்த போதெல்லாம் பொங்கு கடலு முறங்காது பொழுதோர் நாளும் விடியாது திங்க ளுறங்கும் புள்ளுறங்குந் தென்ற லுறங்கும் சிலகாலம் எங்கு முறங்கு மிராக்கால மென்கண் ணிரண்டு முறங்காதே.  (விவேக சிந்தாமணி) பூவுறங்குது பொழுதும் உறங்குது நீ யுறங்கவில்லை நிலவே கானுறங்குது காற்றும் உறங்குது நானுறங்கவில்லை  மானுறங்குது மயிலும் உறங்குது மனம் உறங்கவில்லை- என்  வழியுறங்குது மொழியும் உறங்குது விழியுறங்கவில்லை (கண்ணதாசன்)

படித்து முடித்த பின்...

 நன்றாகப் படிக்கவேண்டும். கற்றதை நன்கு பயன்படுத்தும் அளவு புரிந்து  கொள்ளவேண்டும். அதில் நிபுணத்துவம் வந்தபின் அடக்கம் வர வேண்டும். கற்றுக்கொண்ட கல்வி மூலம் தீயனவற்றை நீக்கி, நல்லன செய்ய வேண்டும்.    எது நம்மிடம் இருக்கிறதோ அதில்   மன நிறைவு எய்தவேண்டும். எதை இழந்து விடக்கூடாது என்று நாம் கற்ற கல்வி சொல்கிறதோ அதை திருத்தமாகப் பற்றிக் கொள்ள வேண்டும். நாம் செய்யும் பணியில் யாருக்கும் கெடுதல் நினைக்காமல், தப்பு வழியில் பொருள் தேடாமல்  அறவழியில்  நிற்க வேண்டும். கடவுள் நம்பிக்கையுடன்  இறைவனை உணர வேண்டும்.    இப்படி வாழ முடியும் என்றால் நாம்  நன்னெறியில் செல்பவர் என்ற நிலையை எட்டிவிடுகிறோம்.   கற்றாங் கறிந்தடங்கித் தீதொரீஇ நன்றாற்றிப் பெற்றது கொண்டு மனந்திருந்திப் - பற்றுவதே பற்றுவதே பற்றிப் பணியறநின் றொன்றுணர்ந்து நிற்பாரே நீணெறிச்சென் றார்.      நீதிநெறி விளக்கம் (குமரகுருபரர்)

அது வெறும் மழலை மொழி தான்

குழந்தை ஏதோ சொல்ல முயற்சிக்கிறது. அந்தக்  குழந்தையின் மழலைச்சொல் யாழிசை போல இனிமையாகவா இருக்கிறது? இல்லையே. எந்தக் காலத்தில் எந்த இராகம் என்று அந்தக் குழந்தை பார்ப்பதில்லை. எப்போதும் ஒரே இராகம் தான் அந்த மழலையில்.   அந்தக் குழந்தை என்ன சொல்கிறது என்ன பாடுகிறது என்று கூட எதுவும் புரிபடுவதும்  இல்லை.  என்றாலும் அந்தக் குழந்தை தன் மழலை மொழியில் தன் தந்தையின் மனதைக் கொள்ளை கொண்டுவிடுகிறது.   என் பாடல்கள் அந்த மழலை மொழி போல.  அதியமான் என் தந்தை போல.  ஏதோ எனக்குத் தெரிந்ததை நான் சொல்ல அது அவனுக்குப் பிடித்து விடுகிறது. அவ்வளவு தான்.  இப்படிச் சொல்பவர் ஔவையார். யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா; பொருள் அறிவாரா; ஆயினும், தந்தையர்க்கு அருள் வந்தனவால், புதல்வர்தம் மழலை; என் வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார் கடி மதில் அரண் பல கடந்த         நெடுமான் அஞ்சி! நீ அருளல்மாறே. (புறநானூறு)

இது தான் காரணம்.

 அன்றாட வாழ்க்கையை கொஞ்சம் சிரமப்பட்டு சமாளித்துக்கொண்டிருக்கும் எளிய குடும்பத்துக்கு பெரியவர்கள் விருந்தினராகச் செல்லக்கூடாது. வந்தவரை நன்றாகக் கவனிக்க வேண்டும் என்று தன் தகுதிக்கு மீறி செலவு செய்து சிரமப்படுவர். அது ஆசையாக நாம் வளர்க்கும் குருவியை நாமே அறுத்துத் துன்புறுத்துவது போன்றது. அதனால் தான் பெரியவர்கள் " நான் எங்கேயும் போவதில்லை. போனால் ஒத்துக்கொள்வதில்லை" என நளினமாக அவர்களின் அழைப்பை மறுத்துவிடுவார்கள். நல்கூர்ந் தவர்க்கு நனிபெரிய ராயினார் செல்விருந் தாகிச் செலவேண்டா - ஒல்வ திறந்தவர் செய்யும் வருத்தம் குருவி குறங்கறுப்பச் சோருங் குடர்.    (பழமொழி)

யாரும் நிற்க முடியாது என் முன்னால்...

  வில் பாவம் என்னைப் பார்த்தவுடன் வளைந்துவிட்டது என்றும், யானை உறங்கிவிட்டது என்றும், புலி என்னைக் கண்டு பதுங்கிவிட்டது என்றும், என்னைப் பார்த்த ஆட்டுக் கடா முட்டாமல் பின்வாங்குகிறது என்றும் ஒருவன் நினைத்துக் கொண்டிருந்தால் யாரும் சொல்லாமலேயே அவன் முட்டாள் என்பதை அறிந்து கொள்ளலாம். ஏனென்றால், அடுத்து நடக்கப் போவதைப் புரிந்துகொள்ளும் அறிவு அவனுக்கு இருப்பதில்லை.  ஒரு மூர்க்கன் தான் பேசும் முட்டாள்தனமான பேச்சைக் கேட்டு பண்புள்ளவர்கள் பொறுமையாக இருப்பதை, தனக்கு எல்லோரும் பயந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொள்கிறான். காரணம் அவனுக்கும் அடுத்து நடக்கப் போவதைப் புரிந்து கொள்ளும் அறிவு இருப்பதில்லை. வில்லது வளைந்த தென்றும் வேழம துறங்கிற் றென்றும் வல்லியம் பதுங்கிற் றென்றும் வளர்கடா பிந்திற் றென்றும் புல்லர்தம் சொல்லுக் கஞ்சி பொறுத்தனர் பெரியோ ரென்றும் நல்லதென் றிருக்க வேண்டாம் நஞ்செனக் கருத லாமே.  (விவேக சிந்தாமணி)

எவ்வளவு தூரம் வரை அன்பு...

 எவ்வளவோ தூரத்தில் இருக்கிறது மேகக் கூட்டம். ஆனாலும் அதைக் கண்டு மயில் ஆடுகிறது. எவ்வளவோ தூரத்தில் இருக்கிறது சூரியன். ஆனாலும் அதைக் கண்டு தாமரை மலர்கிறது. எவ்வளவோ தூரத்தில் இருக்கிறது நிலவு. ஆனாலும் அதைக் கண்டு சிவந்த ஆம்பல் மயங்குகிறது; மலர்கிறது. நம் அன்புக்குரியவர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தால் என்ன? உண்மை அன்பு என்றால் மனதுக்குள் நெருக்கமாக இருப்போம். மங்கு லம்பதி னாயிரம் யோசனை மயில்கண்டு நட மாடும் தங்கு மாதவன் நூறாயிரம் யோசனை தாமரை முகம் விள்ளும் திங்க ளாதவற் கிரட்டியோ சனைபுறச் சிறந்திடு மரக்காம்பல் எங்க ணாயினு மன்பரா யிருப்பவ ரிதயம்விட் டகலாரே. (விவேக சிந்தாமணி) .

கண்ணனை வேலைக்குச் சேர்த்துக் கொண்ட பாரதியார்...

  யாரை வேலைக்குச் சேர்த்தாலும் ஒழுங்காக இருப்பதில்லை. வேலை ஆட்களால் எனக்கு துன்பம் தான் வந்திருக்கிறது.  யாரையும் வேலைக்குச் சேர்க்காமல் விட்டு விடலாம் என்றால் எந்த வேலையும் நடப்பதில்லை.  என்னடா செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் அவன் வந்தான். எனக்கு ஒரு வேலை வேண்டும் என்றான். நான் ஒரு இடைச்சாதிக்காரன். மாடு மேய்க்கத்தெரியும்.  மக்களைக் காக்கத் தெரியும். வீடு கூட்டத் தெரியும். துணிமணிகளை எல்லாம் கூட கவனமாகப் பார்த்துக்கொள்வேன். சின்னக் குழந்தைகளுக்கு அழகாகப் பாடல்கள் சொல்லித் தருவேன். குழந்தைகள் அழாதபடி விளையாட்டுக் காட்டி மகிழ்விப்பேன்.  நீங்கள் காடு மேடு என எங்கே போனாலும்  இரவு பகல் எந்த நேரமானாலும்    உங்களோடு வருவேன்.  கள்ளர் பயம் கொஞ்சம் கூட உங்களுக்கு இருக்காது. எந்தத் துன்பமும் உங்களை அணுகாமல் பார்த்துக்கொள்வேன். என்றான் அவன்.  "சரிப்பா உன் பேர் என்ன" என்றேன். "கண்ணன்" என்றான். பார்த்தால் வாட்ட சாட்டமாக இருந்தான். அவன் கண்ணைப் பார்த்தால் பொய் சொல்ல மாட்டான் என்று தோன்றியது.  அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்...

Abraham Lincolns letter to his son’s teacher

  Abraham Lincolns letter to his son’s teacher   My son starts school today. It is all going to be strange and new to him for a while and I wish you would treat him gently.  It is an adventure that might take him across continents. All adventures that probably include wars, tragedy and sorrow.  To live this life will require faith, love and courage. So dear Teacher,  will you please take him by his hand and teach him things he will have to know, teaching him – but gently, if you can.  Teach him that for every enemy, there is a friend.  He will have to know that all men are not just, that all men are not true. But teach him also that for every scoundrel there is a hero, that for every crooked politician, there is a dedicated leader. Teach him if you can that 10 cents earned is of far more value than a dollar found.  In school, teacher, it is far more honorable to fail than to cheat.  Teach him to learn how to gracefully lose, and enjoy...

மெல்ல நகர்கிறது என் இரவு!

  என் அன்புத் தோழியே!  அன்று நான் தூக்கம் வராமல் பெருமூச்சு விட்டேன். பெண் மானை ஏவி விட்டு  ஆண் மானைப் பிடிப்பார்கள். அவன் மேல் கொண்ட ஆசை என்ற பெண்மானால் என் தூக்கம் என்ற ஆண் மான் மாட்டிக்கொண்டு வருந்துகிறது. என் பெருமூச்சைக் கேட்டு அருகே படுத்திருந்த என் தாய் "பாப்பா, நீ இன்னும் தூங்கலையா" என்று கேட்டாள். "அவனை எண்ணிப் பறந்து போய்விட்டது என் மனம். அதனால், தூக்கம் போய்விட்டது" என்று எப்படிச் சொல்வது? ஆகவே, என்ன சொல்வது என்று தெரியாமல் படுத்திருந்தேன்.  அவன் ஊரில் செம்முல்லைப் பூக்களை தளவம் என்று சொல்வார்கள். அந்த செம்முல்லைப் பூக்களை வாயில் கவ்விக் கொண்டு மரங்கொத்திக் குருவிகள் பறந்து போகும்.  என்னை அந்தச் செம்முல்லையாக  அவனை அந்த மரங்கொத்தியாக நினைத்துக்கொண்டே ...மெல்ல நகர்த்திக்கொண்டிருக்கிறேன் என் இரவை. கேளாய், எல்ல தோழி! அல்கல் வேணவா நலிய, வெய்ய உயிரா, ஏ மான் பிணையின் வருந்தினென் ஆக, துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை, ''துஞ்சாயோ, என் குறுமகள்?'' என்றலின்,        சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில், ''படு மழை பொழிந்த பா...

பூ வைக்க. ஆசை

 எங்கும் பூத்துக் குலுங்குகின்றன முல்லை மலர்கள். ஆடுகளுக்கு தளை பறிக்க, சல்லைக் கோல் வைத்திருக்கும் அவன் இடையன். கறந்த பாலைக் கொடுத்து விட்டு கூழை வாங்கிக்கொண்டு போகும் அவன் கழுத்தில்கூட முல்லை மொட்டுகள்.  எனக்கும் முல்லை மலர் சூட ஆசை தான்.  பொருள் தேடிப் போன என்னவன் இன்னும் வீடு திரும்பாத போது நான் எப்படிப் பூச்சூட?  அவரோ வாரார் முல்லையும் பூத்தன; பறியுடைக் கையர் மறியினத்து ஒழிய, பாலொடு வந்து கூழொடு பெயரும் ஆடுடை இடைமகன் சென்னிச் சூடிய எல்லாம் சிறு பசு முகையே. (குறுந்தொகை)

இதுக்கு சரி என்றால் ...

  எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக வயதாகிக் கொண்டே போகும்.  முதுமை வருவதற்கு முன்பே முடிந்தவரை யாருக்காவது ஏதாவது நல்லது செய்ய வேண்டும்.  அப்படி எந்த நல்லதும் யாருக்கும் செய்யாத நிலையில் வயதாகிப் போய்விடக் கூடாது. வயதான பின்பு  நாம்  நல்லது செய்யலாம் என நினைத்தால் அது நடக்காது. ஏனென்றால் நமக்கே அப்போது உதவிக்கு ஆள் வேண்டும். ஒரு நல்லதும் செய்யாமல் விட்டுவிட்டு இப்போது வயோதிகம் காரணமாக உதவிக்கு ஒரு வேலைக்காரப் பெண் வீட்டில் இருந்தால்  அந்தப் பெண்ணிடம் திட்டுவாங்கியே அவரது நாட்கள் நகருமாம். "போ, வெளியே போய் உட்கார்",  "இங்கே என்ன வேலை அங்கே போய் வெளித் திண்ணையில் உட்கார்"  இப்படியெல்லாம் அந்தப் பெண்ணிடம் திட்டு வாங்கியே முதுமையைக் கழிக்க  வேண்டியவர்கள் இப்போது யாருக்கும் எந்த உதவியும் செய்ய வேண்டியதில்லை.  இப்படிச் சொல்கிறது இந்தச் செய்யுள். மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை ஊக்கி அதன்கண் முயலாதான் - தூக்கிப் புறத்திரு போகென்னும் இன்னாச் சொல் இல்லுள் தொழுத்தையால் கூறப் படும்.  (நாலடியார் )

ஒத்தை ஏர் ... அத்தனை பூமி

 மூங்கில் போன்றது வசீகரிக்கும் அவள் தோள்.   அவளது அந்த அழகிய கண்ணுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும்.  ஆனால், அவள் வீடோ ரொம்பத் தொலைவில் இருக்கிறது.   நெஞ்சே!  இப்பவே அவளைப் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறாய். நான் என்ன தான் செய்வது? மழை பெய்த காலத்தில் ஒத்தை ஏர் மாட்டை வைத்துக் கொண்டு மொத்த நிலத்தையும் ஈரம் போவதற்குள் உழவோட்டத் துடிக்கும் குடியானவன் போல இருக்கிறது என் நிலைமை. இப்படியே நான் தனியாகப் புலம்பிக் கொண்டிருக்க வேண்டியது தானா? ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள் பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே நெடுஞ் சேண் ஆர் இடையதுவே; நெஞ்சே, ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து ஓர் ஏர் உழவன் போல, பெரு விதுப்பு உற்றன்றால்; நோகோ யானே. (குறுந்தொகை)

நானும் நெய்தலும் ...

உன் ஊர் வயல் சார்ந்த வளமான ஊர். அந்த வயல்களில் தேங்கியுள்ள நீரில் நெய்தல் மலர்ந்து மணம் வீசும்.  அந்த மணத்தால் கவரப்பட்ட வண்டுகள் அந்தப் பூக்களை நாடி வரும்.  வயலில் களை பறிக்க வரும் பெண்கள் களைகளைக் கையாடி, பிடுங்கிய பூடுகளை வரப்பில் வீசி எறிந்து விடுவார்கள்.   வண்டுகளுக்கு அந்தப் பூ உன்னதம் தான்.  ஆனால் களை பறிக்க வந்த அந்தப் பெண்களுக்கு அந்த நெய்தல் மலர்கள் வேண்டாத களைகள் தானே.  வெடுக்கென பிடுங்கி அந்த நெய்தல் மலர்களையும் வரப்பில் போட்டுவிடுவார்கள்.  ஆனாலும் அந்தப் பூக்கள் வரப்பிலும் மணம் வீசிக்கொண்டு கீழே கிடக்கும். "களை எனப் பிடுங்கிப் போட்டுவிட்டார்களே, இந்தக் கொடியவர்களை விட்டு வேறு நிலத்துக்குப் போய் வளர்வோம்" என்று நெய்தல் எப்போதும் நினைப்பதில்லை. நானும் நெய்தலும் ஒரு ஜாதி. நெய்தலுக்கு வயல்  எனக்கு உன் இதயம். கைவினை மாக்கள் தம் செய்வினை முடிமார், சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட, நீடிய வரம்பின் வாடிய விடினும், ''கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம்'' என்னாது'' பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும் நின் ஊர் நெய்தல் அனையேம் பெரும! நீ எமக்...

ஒரே முகம் ஒத்துவராது...

கொடுத்த கடனைத் திருப்ப வாங்குவதற்காக ஒருவரைப் பாராட்டிக் கெஞ்சும்போது காணப்படும் நம் முகபாவமும் ,  நாம் வாங்கிய கடனை உரிய காலத்தில் திருப்பிக் கொடுக்கும் போது இருக்கும் நம் முகபாவமும்...  எப்போதும் ஒன்றாக இருக்காது.  அது இன்று நேற்று வந்ததல்ல. காலங்காலமாக கொடுத்த கடனைக் கேட்டுக் கெஞ்சுவதற்கு  ஒரு முகமும் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க ஒரு முகமும் என்று மனிதர்கள் இயற்கையிலேயே அப்படித் தான்.  எப்பவும் ஒரே முகம் என்றால் கடன் எல்லாம் அவருக்கு ஒத்து வராது என்று அர்த்தம்.   உண் கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம் கொண்டது கொடுக்குங்கால் முகனும், வேறாகுதல் பண்டும் இவ் உலகத்து இயற்கை; அஃது இன்றும் புதுவது அன்றே புலனுடை மாந்திர்! (கலித்தொகை)

உன் காலடி ஓசையிலே...

  ஊரில் எல்லோரும் தூங்குகிறார்கள்.  ஆனால் நான் தூங்கவில்லை. தூங்காமல் நான் என்ன செய்து கொண்டிருப்பேன் தெரியுமா? அவன் வருவதாக நினைத்துப் பார்ப்பேன்.  எங்கள் வீட்டிலிருந்து ஏழு வீடு தள்ளி ஒரு நொச்சிச் செடி இருக்கிறது. அதன் இலை கூட மயில் காலடி போல இருக்கும்.  அவன் வரும் போது அந்த நொச்சிச் செடியைத் தாண்டித் தானே வரமுடியும்.  அப்போது அந்த நொச்சிப் பூக்கள் அசையும் தானே.  அந்தப் பூக்கள் அசையும் ஓசை கேட்கிறதா என்று உற்றுக் கேட்டுக் கொண்டே தூங்காமல் இருப்பேன். கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே- எம் இல் அயலது ஏழில் உம்பர், மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே. (குறுந்தொகை)

எங்கள் தெருவில் காட்டுப்பூனைகள்

 இனி மேல் தான் திருமணம் நடக்கவேண்டும்.  அவளைப் பார்க்க வேண்டும் போல இருக்கிறது அவனுக்கு.  எனவே அவன் திருமணத்துக்கு முன்பாகவே அவளைத் தேடி வருகிறான்.  அவளைப் பார்க்க வரும் போது அவள் தோழி அங்கே இருக்கிறாள். அவள் அவனிடம் சொன்னது தான் இது. எங்கள் வீட்டில் நாங்கள் எல்லோரும் கோழி வளர்க்கிறோம்.  அந்தக் கோழி குஞ்சுகளோடு சேர்ந்து இரை தேடிக்கொண்டிருக்கும்.  அங்கே மெல்ல ஒரு காட்டுப் பூனை வரும். அது எதற்கு அங்கே வருகிறது தெரியுமா? சூழ்நிலை தெரியாமல் யதார்த்தமாக மேய்ந்துகொண்டிருக்கும் குஞ்சுகளைக் கொன்று தன் பசியைப் போக்கிக்கொள்வது தான் அதன் நோக்கம். காட்டுப் பூனை வருகிறது என்று தெரிந்தவுடன் கோழி தான் குஞ்சுகளை சுதந்திரமாக விடாது. தன் இறக்கைக்குள் குஞ்சுகளை பத்திரமாக வைத்துக்கொள்ளும்.  நீ அவளைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறவன் தான்.  ஆனாலும் இந்தத் தெருவில் உள்ள சிலர் காட்டுப் பூனை மாதிரி ஆட்கள். அடுத்தவர்களைத் தவறாகப் பேசிப் பேசியே கொன்றுவிடுவார்கள்.  அந்தப் பூனைகளிடம் இருந்து தப்ப ஒரே வழி திருமணம் தான்.  அதற்கு முன் நீ அவளைப் பார்க்க வருவ...

இனி பல்லைப் பார்க்கும்போதெல்லாம்...

  ஒரு பெண்ணின் பல்லைப் பார்த்துவிட்டு  "ஆகா அது முல்லை மலர் போல"  என்றும்  "முல்லை மலரின் மொக்கு தான் அது"  என்றும்  "இல்லை இல்லை அது பல் அல்ல முத்து"  என்றும்  மயங்கிப் பிதற்றிக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள்.  எந்தப் பல்லுக்காக ஏங்கிக் கொண்டிருந்தார்களோ அந்தப் பற்கள் யாரும் ரசிக்காமல் கிடக்கும்.  எங்கே?   இறந்த பின் தகனம் செய்யும் மைதானத்தில் அது போன்ற பற்களையும் எலும்புகளையும் நிறையப் பார்க்கலாம்.  அதெல்லாம் பார்த்த பின்பும் பல்லை முத்து என்றும் முல்லை என்றும் சொல்பவனின் மூடத்தனத்தை என்ன சொல்வது? முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும் கல்லாப் புன்மாக்கள் கவற்ற விடுவெனோ எல்லாரும் காணப் புறங்காட்டு உதிர்ந்துக்க பல்லென்பு கண்டொழுகுவேன். (நாலடியார்)