இறவாறம் என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த அழகான தமிழ்ச்சொல்.
"மழை பேஞ்சா எறப்பு நேர் ஒழுகும்" என்று நம் ஊர்களில் பேசுவதையும் கேட்டிருப்போம்.
இந்த இறப்பு (எறப்பு)என்ற சொல் சங்க இலக்கியங்களில் சில பாடல்களில் வருகிறது.
குறுந்தொகைப் பாடல் ஒன்று.
பொருள் தேடச் சென்ற கணவனைப் பிரிந்து தலைவி தனிமையில் வருத்தத்துடன் இருக்கிறாள். அவளைக் காணத் தோழி வருகிறாள்.
“இந்த மாலைப்பொழுது எனக்குத் துன்பத்தை அளிக்கிறது. என்னைத் துன்புறுத்தும் இந்த மாலைப்பொழுதும் தனிமையும் என் கணவர் சென்ற நாட்டிலும் இருக்கும். ஆகவே, அவர் விரைவில் திரும்பி வருவார்” என்று தோழியிடம் தலைவி கூறுகிறாள்.
அந்தப் பாடல் இது தான்.
ஆம்பற் பூவின் சாம்ப லன்ன
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து
எருவினுண் தாது குடைவன ஆடி
இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே.
ஆம்பற் பூவின் சாம்ப லன்ன-
வாடிய ஆம்பல் பூவின் சாம்பல் நிறம் போல
கூப்பிய சிறகர் - குவிந்த சிறகுகளை உடைய
குரீஇ - குருவி
முன்றில் -முற்றத்தில்
உணங்கல் -உலர்ந்த தானியம்
மாந்துதல் - உண்ணுதல்
மன்றம் -வீதி
எருவின் நுண்தாது- சாணத்தின் நுண்ணிய பொடி
குடைவன-குடைந்து
இறை - வீட்டின் இறப்பு(இறவாறம்)
வதிதல் - வசித்தல்
புன்கண் -துன்பம் தரும்
புலம்பு- தனிமை
இன்றுகொல் -இல்லையோ?
அவள் சொல்வது இதுதான்.
தோழி, இங்கே, வாடிய அல்லிப்பூவைப் போல் குவிந்த சிறகுகளையுடைய குருவிகள், முற்றத்தில் உலரும் தானியங்களைத் தின்று, தெருவில் கிடக்கும் சாணத்தின் நுண்ணிய பொடியைக் குடைந்து விளையாடி, வீட்டின் இறப்பிலுள்ள இடத்தில் தம்முடைய குஞ்சுகளோடு மாலைநேரத்தில் தங்கியிருக்கின்றன. இதுபோல், பிரிந்து வாழ்பவர்களுக்குத் துன்பத்தைத் தரும் மாலைப் பொழுதும், தனிமையும், தலைவர் சென்ற நாட்டில், இல்லையோ?
Comments
Post a Comment
Your feedback