Skip to main content

நான் ஒண்ணு சொன்னா அஞ்சு சொன்ன மாதிரி

 

சீதையைத் தேடி ராமன் கானகத்தில்  அலைந்து கொண்டு இருக்கின்றான். சீதையைத் தேட உதவி செய்வதாகச் சொன்ன சுக்ரீவன் மதுமயக்கத்தில் காலம் தாழ்த்திக் கொண்டு இருக்கிறான். சொன்ன காலம் தாண்டிய பின்பும் சுக்ரீவனிடம் இருந்து எந்த பதிலும் வராததால் கோபம் கொள்கின்றான் ராமன்.

 

சுக்ரீவனை எச்சரித்து வருமாறு லட்சுமணனை அனுப்புகிறான் ராமன்.

"நெஞ்சில் வஞ்சம் கொண்டு ஞ்சுபோல் இருப்பவர்களை தண்டித்தல் நீதிதான். எனவே அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவனை  எச்சரித்து வருவாய்"

 எனக் கூறுகிறான்.

அப்போது  ஒரு அடியில் ஐந்து வேறு வேறு பொருள் இருக்குமாறு கம்பன் சிலேடை அமைத்திருப்பான்.

பாடல்:

நஞ்சம் அன்னவரை நலிந்தால் அது
வஞ்சம் அன்று; மனுவழக்கு; ஆதலால்
அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன்
நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய்.

 

பொருள்

 

நஞ்சம் அன்னவரை  லிந்தால் - நஞ்சு போன்றவர்களை தண்டித்தால்

அது வஞ்சம் அன்று - அது வஞ்சம் அன்று

மனுவழக்கு ஆதலால் - அது
நீதிதான் ஆதலால்

அஞ்சில்  ஐம்பதில் -அஞ்சில் அம்பதில்

ஒன்று அறியாதவன் - ஒன்றும் அறியாதவன்

நெஞ்சில் நின்று  நிலாவ நிறுத்துவாய் - மனதில் 
படும் படி  எச்சரித்து வருவாய்.

 

அப்போது சொன்னது,

அஞ்சில் அம்பதில் ஒன்றறியாதவன்.

 இதில் தான் ஐந்து அர்த்தங்கள் வரும்.

 

முதலாவது பொருள்:

அஞ்சில் அம்பதில் ஒன்றறியாதவன்

 அஞ்சு வயதிலும் சரி; ஐம்பது வயதிலும் சரி ஒன்றும் அறியாதவன் .

பொருள் 2:

அஞ்சு + இல் + அம்பு + அது + ஒன்று + அறியாதவன்

 அச்சம் இல்லாத அம்புகள் என்னிடம் உள்ளன. அதில் ஒன்றைக் கூட அவன் அறிய  மாட்டான்.

பொருள் 3:

அஞ் + சிலம்பதில் + ஒன்று + அறியாதவன்

(சிலம்பு- மலை)

அந்த மலையில் உள்ள அவன் ஒன்றும் அறியாதவன்

பொருள் 4:

அஞ்சு + அம்பது + ஒன்று = 5+50+1=56 . அதாவது , 56 ஆவது வருடம் தந்துபி வருடம்.

லட்சுமணன் தந்துபி என்ற அரக்கனை அழித்ததை சுக்ரீவன் அறிந்திருக்கமாட்டான். 

 அதை அவன் நெஞ்சில் நிறுத்துவாய்.

பொருள் 5:

அஞ்சிலம் + பதில் + ஒன்று + அறியாதவன்

கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் உள்ளது குறித்து அச்சமும்  இல்லை;  நமக்கு ஒரு பதிலும் அவனிடம் இல்லை. சரி தவறு ஒன்றும் அறியாதவன் அவன்.


சிலேடை பாடுவதை விட  ஐம் பொருள் சிலேடை அமையும்படி பாடுவது மிகவும்  கடினம்.

நாள்தோறும் ஊர்தோறும் எங்காவது கம்பன் பேசப்படக் காரணம் இது போன்ற வியப்புகள் தான்.

கம்பனைப் போலவே முயற்சித்து திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய ஒரு  ஐம் பொருள் சிலேடை வெண்பா இது.

 

ஒட்டினரும் கூத்தினரும் மோடையும் வாளுந்துகிலும்

கொட்டி நெய்தலைக் காட்டும் குற்றாலம்- கட்டியபூண்

அக்குமணிக் கோவையா ரம்பரவை நாவலன்சொல்

வைக்குமணிக் கோவையார் வாழ்வு.

 

 இந்தப் பாடலில் வரும் முதல் ஏழு சொற்களுக்குள் ஐந்து சிலேடைகள் அமையப் பாடியுள்ளார் கவிராயர்.

 

சபதம் செய்த போர்வீரர், இசைக்கருவிகளை இசைக்கும் கூத்தினர்,  நீர்நிறைந்த ஓடை,  வெற்றியை தரும் வாள், அழகிய ஆடை என்ற ஐந்துக்கும் பொருத்தமாக இருக்குமாறு சிலேடை பாடியுள்ளார்.

 

பொருள் 1:

ஒட்டினர் கொட்டிய நெய்தலைக் காட்டும் குற்றாலம்

 சபதம் செய்த போர்வீரர் தோளைக் கொட்டிக்கொண்டு வருவதைக் காட்டுகின்ற குற்றாலம்.

 

பொருள் 2:

கூத்தினர் கொட்டி நெய்தலைக் காட்டும் குற்றாலம்

 இசைக்கருவிகளை கொட்டி முழக்கியபடி  வரும் கூத்தினரை உடைய குற்றாலம்

 

பொருள் 3: 

ஓடை கொட்டி நெய்தலைக் காட்டும் குற்றாலம்-

நீர் நிரம்பிய ஓடையில் கொட்டிப் பூவும் நெய்தல் பூவும் மிதந்து வருகின்ற குற்றாலம்

 

பொருள் 4: 

வாள் கொட்டி நெய் தலைக்கு  ஆட்டும் குற்றாலம்-

 வெற்றியைத் தரும் வாள் சம்மட்டியால் அடிக்கப்பட்டு செம்மையாக்கப்பட்டு  அதன் மீது நெய் பூசப்படுகின்ற வழக்கமுடைய குற்றாலம்

 

பொருள் 5:

துகில் கொட்டி நெய்தலைக்  காட்டும் குற்றாலம்-

 நூலை தட்டி நெய்து தரும்  தொழிலில் பெருமையைக் காட்டும் குற்றாலம்.

 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...