Skip to main content

வள்ளிதிருமணம்

      
வள்ளிதிருமணம் ,அரிச்சந்திரன், மதுரைவீரன், பவளக்கொடி சத்தியவான் சாவித்திரி ...இந்தப் பெயர்களை எல்லாம் கேட்கும்போது மனசுக்குள் மலரும் நினைவுகள் எழும். 

 இவை எல்லாம் ஊர்க் கோயில் விழாக்களில் கலை நிகழ்ச்சிகளாக நடத்தப்பட்ட நாடகங்களின் பெயர்கள்.

 ராஜபார்ட், பபூன், டான்ஸ் நடிகைகள், ஆர்மோனிய பெட்டிக்காரர் ,மிருதங்கம், டோலக் என பலரும் சேர்ந்த குழு தந்தது தான் அத்தகைய  நாடகங்கள். நாடகத்தின் திரைக்காக சீன்  கம்பெனிகள் நகரங்களில் இருக்கும். கோடையிடி குமுறல், இளையராணி என பல  பட்டங்களோடு அந்த நாடகக் கலைஞர்களின் பெயர்கள் நோட்டீசில் அச்சடிக்கப்படும். பல வண்ணங்களில் மட்டித் தாளில் அச்சடிக்கப்பட்ட அந்த நோட்டீசை பாக்கெட்டில் வைத்திருந்து பெருமையாக விளக்கம் சொல்வது அப்போதெல்லாம் வழக்கம். 

 நாடகக் கலைஞர்களின் இரவு உணவு உள்ளூரில் உள்ள ஒரு பிரமுகர் வீட்டில் ஏற்பாடு செய்யப்படும்.  10 மணிக்கு மைதானம் நிரம்பி விடும். ஓரிரண்டு சாமி பாட்டுக்களை பெட்டிக்காரர் பாடுவார். பிறகு பபூன்  நகைச்சுவை, பாட்டு என தனியாவர்த்தனம் செய்வதில் அரைமணிநேரம் போகும்.  பிறகு டான்ஸ் காகவே அழைத்துவரப்பட்ட நடிகையரின் பாடல்கள் ஒன்றிரண்டு என11.30 மணிக்கு கதை துவங்கும். ராஜபார்ட் வரும்போது வருகை முன்பாட்டாக (Entry song)  திரைக்குப்பின் நின்றுகொண்டு பல்லவியையும் முதல் சரணத்தையும் பாடிவிட்டு மீதிப் பாடலை மேடையில் நடுநாயகமாக நின்று பாடுவார். ராஜபார்ட் மட்டுமல்லாமல் பெரும்பாலான கலைஞர்கள் இந்த உத்தியைப் பின்பற்றுவார்கள்.

 வள்ளி திருமணம் நாடகத்தில் வள்ளி தினைப்புனத்தில் இருக்க, ஒரு மானைத் தேடி வந்ததாக அந்த தினைப்புனத்தில் முருகன் நுழைந்து ஒரு பாட்டுப் பாடுவான். வள்ளி திருமணம் நாடகத்தில் ஹைலைட்டான பாட்டு இதுதான். 

 காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே- புல்
மேயாத மான் புள்ளி மேவாத மான் நல்ல சாதிமான்
சாயாத கொம்பிரண்டிருந்தாலும் அது தலைநிமிர்ந்து
பாயாத மான் அம்மானைத் தேடிவந்தேன் ஆரணங்கே!


'காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே'   என்பது உச்சஸ்தாயில் பாடப்படும். இடையிடையே ஆர்மோனியப் பெட்டிக்காரர் பின்பாட்டாக அதைப் பாடுவார்.

 'மேயாதமான்' வரியும் இதேபோல விஸ்தாரமாகப் பாடப்படும். ஒவ்வொரு இரண்டு வரி பாடிய பின்னும் மேயாதமான் என மீண்டும் பெட்டிக்காரர் பாடுவார்.

'மான்வரக்  கண்டதுண்டோ 

வள்ளி மான்வரக் கண்டதுண்டோ'

 என்ற வரிகளோடு அந்தப் பாட்டு நிறைவு பெறும். அந்தப் பாட்டு முடிந்த பின் அந்தப் பாட்டுக்காகவே உட்கார்ந்திருந்த பெரியவர்கள் சிலர் அங்கேயே நீட்டி நிமிர்ந்து படுத்துக்கொள்வர்.  தாய்மார்கள் தூங்கும் பெரிய பையனைத் தலையணையாக்கி சின்னக் குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு ஆர்வமாக இக்கதையைக் கவனிப்பர். 

 ராஜபார்ட் பாடும் பாடல்களில் சில வரிகளை பபூன் தன் பாடி லாங்குவேஜில் இரட்டை அர்த்தத்தில் பாடுவார்.  

'சாயாத கொம்பிரண்டிருந்தாலும்' என்பது அப்படிப்பட்ட ஒருவரி. 

 
 வள்ளி திருமணத்திற்கு இந்தப் பாட்டுப் போல ஒவ்வொரு நாடகத்திற்கும் சில விஷயங்கள் இருக்கும். எந்த கௌரவமும் பார்க்காமல் எல்லோரும் மண் தரையில் அமர்ந்து  பார்த்த அந்த நாடகங்கள் இன்றும் எங்காவது நடிக்கப்படலாம். பெரும்பாலான கலைஞர்கள் வாய்மொழியாகவே பாட்டு வசனங்களைச் சொல்லும் திறமை படைத்தவர்கள். அவர்களுள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் கூட உண்டு. எல்லாமே வேகம், எல்லாமே நவீனம் என்பதில் தொலைந்து போனவைகளில் இந்த நாடகங்களும் சேரும்.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...