1 டிசம்பர் 1783:
ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பலூனில் சார்லஸ், எயினி எனும் இருவர் 2 மணி நேரம் பறந்து காண்பித்தனர். வெப்பக் காற்று நிரப்பப்பட்ட பலூனை விட ஹைட்ரஜன் வாயு பலூன் மேலானது என்று இன்று நிரூபிக்கப்பட்டது.
1 டிசம்பர் 1862:
உத்திர பிரதேசத்தில் ஆக்ராவில் வானிலை ஆய்வுக்கூடம் திறக்கப்பட்டது.
1 டிசம்பர் 1877:
கல்கத்தா வர்த்தகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியாவில் முதன்முறையாக வி.பி.பி யில்(V.P.P) பார்சல் அனுப்பும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
1 டிசம்பர் 1901:
தமிழ் எழுத்தாளர் வை.மு. கோதை நாயகி அம்மாள் பிறந்த தினம்.
பெரிய புராணத்தின் முதல் பாடல்- 'உலகெலாம் உணர்ந்து' என்று தொடங்கும்..
சேக்கிழார் பெருமானுக்கு சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்ததாக எண்ணப்பட்டு, அதிலிருந்து வந்த வாழ்த்துப் பாடல் இது.
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
சேக்கிழார் எப்படி அந்த முதல் அடியைப் பற்றிக்கொண்டாரோ அதே போல் தனக்கும் 'உ, து' வை அமைத்துக் கொண்டவர் வை.மு.கோதைநாயகி அம்மாள்.
அதை ஒரு சுவாரஸ்யமான சென்டிமென்ட் என்று எடுத்துக் கொண்டாலும் சரி தான்.
அவர் எழுதிய நாவல்கள் மொத்தம் 115. ஒன்றிரண்டு நாவல்கள் தவிர அவரது அனைத்து நாவல்களும் 'உ' என்ற எழுத்தில் தொடங்கி 'து' என்ற எழுத்தில் முடிகின்றன.
முறையான எந்தப் படிப்பும் இல்லாமல் கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வந்த கோதைநாயகியை கல்வி அறிவு தந்து ஒரு படைப்பாளியாக அறிவுலகம் போற்றும் அளவுக்கு உயர்த்தியது அவரது மாமியாரின் அதீத அக்கறை.
5 வயதில் அவருக்குத் திருமணம். கணவனுக்கு வயது அப்போது 9.
எழுதப் படிக்கத் தெரியாத அவருக்கு வாய்மொழிக் கதைகள் தான் வழிகாட்டியாக இருந்தன.
நாலடியார், தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம், திருவாய்மொழி எல்லாம் இப்படிப் படித்துக் கொண்டவைதான்.
திருமணம் ஆன பின் தான் முறையாகத் தமிழ் கற்றுக் கொண்டார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஆங்கிலம் இரண்டையும் கற்றுக் கொண்டார். தன் தோழியர் நடுவில் விளையாட்டுப் போக்கில் கதை சொல்லத் தொடங்கி அது அவரது திறமையை அடையாளம் காட்டுவதாக மாறியது.
பத்திரிக்கைத் துறையில் அவர் நீண்ட காலம் பத்திரிக்கை ஆசிரியர், வெளியீட்டாளர் என புகழ் பெற்றார். முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டு மேடையில் இசைப் பாடல்கள் பாடி வந்தார். அவர் எழுதிய இசைப் பாடல்கள் ( கீர்த்தனைகள்) புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
திரைப்படத் தணிக்கை துறையிலும் பணியாற்றியிருக்கிறார்.
இன்று உரைநடைத் தமிழ் என்றால் தவிர்க்க முடியாத ஒரு பெயர் வை.மு.கோதைநாயகி அம்மாள்.
படிப்பறிவில்லாத ஒரு பெண்ணுக்குள் இத்தனை ஆளுமை. ஒரு பெண்ணால் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு ஒரு சரியான பதில் கோதைநாயகி அம்மாள் வாழ்க்கை.
1 டிசம்பர் 1906:
முதல் திரையரங்கம் பாரிசில் திறந்து வைக்கப்பட்டது. இந்த அரங்கத்தின் பெயர் 'சினிமா ஓம்னியா பேத்' என்பதாகும்.
1 டிசம்பர் 1918:
விசிறி சாமியார் என்று அழைக்கப்பட்ட யோகி ராம்சுரத்குமார் பிறந்த நாள். வாரணாசியில் பிறந்த இவர் திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்து ஞான யோகத்தை ஊட்டி வந்தவர். எழுத்தாளர் பாலகுமாரன் இவரை குருவாகக் கொண்டிருந்தார். இவரைப் பற்றிய நூல்களையும் பாலகுமாரன் எழுதியுள்ளார்.
1 டிசம்பர் 1963:
இந்தியாவின் 16 வது மாநிலமாக நாகலாந்து உருவானது.
1 டிசம்பர் 1971:
வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்தியாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இன்று வெற்றிகரமாக நடந்தது.
1 டிசம்பர் 2016:
கவிஞர் பேராசிரியர் இன்குலாப் மறைந்த நாள்.
சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டிருந்தவர் இவர்.
இவர் எழுதிய காந்தள் நாட்கள் என்னும் நூலுக்கு 2017ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் உயிரோடு இல்லை. அதனை அவர் குடும்பத்தினரும் ஏற்க மறுத்துவிட்டனர்.
இன்குலாப் உடல்நலக் குறைவால் டிசம்பர் 1, 2016 அன்று உயிரிழந்தார். அவரது உடல் செங்கற்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாகக் கொடுக்கப்பட்டது.


Comments
Post a Comment
Your feedback