Skip to main content

அபிதான சிந்தாமணி

 

  

 சீவக சிந்தாமணி, விவேக சிந்தாமணி என்பது போல, அபிதான சிந்தாமணி எளிதில் படிக்கக் கூடிய புராணக் கதையோ அல்லது இதிகாச நூலோ அல்ல.

    பல துறைகளைச் சேர்ந்த சொற்களுக்கு விளக்கம் கூறி விளங்கச் செய்யும் கலைக் களஞ்சியம் தான் அபிதான சிந்தாமணி.

 

    அபிதான சிந்தாமணி என்னும் இந்நூலின் ஆசிரியர் ஆ.சிங்கார வேலு முதலியார். இவர் பிறந்த ஊர் பொன் விளைந்த களத்தூருக்கு அருகில் உள்ள ஆலூர். பிறந்த ஆண்டு 1855. இவர் பிறந்த தேதி, மாதம், தாய் - தந்தை பற்றிய விவரங்கள் அறியக் கிடைக்கவில்லை.

 

    இந்நூலின் முதல் பதிப்பு வெளியான 1910-ஆம் ஆண்டில் சிங்கார வேலு முதலியார் சென்னை - பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். 

1050 பக்கங்கள் கொண்ட இந்நூல் தான் தமிழ் மொழியில் வெளியான முதல் கலைக் களஞ்சியம். பாண்டித்துரைத் தேவர் முயற்சியால் மதுரை தமிழ்ச்சங்கம் வெளியிட்டது.

சிங்கார வேலு முதலியார் இந்நூலுக்கு "சர்வார்த்த சித்தி' என்னும் பெயரை வைத்திருந்தார். இந்நூல் கையெழுத்துப் பிரதியாக இருந்த போது இதற்கு ஓர் அறிமுக உரையை யாழ்ப்பாணம் கனகசபை பிள்ளை எழுதித் தந்துள்ளார். இவர் எழுதிய அறிமுக உரையில் இருந்து தான் இந்நூலின் பழைய பெயர் தெரிய வருகிறது.

சொல்லப்படும் பொருள் எதுவாக இருந்தாலும் அதைக் கவிதை வடிவில் மட்டுமே எழுதி வரும் வழக்கம் தொடக்கம் முதலே இருந்து வந்தது. அருஞ்சொற்களுக்குப் பொருள் கூற வேண்டிய தேவை பிற்காலத்தில் தான் எழுந்தது. அந்த அமைப்பில் உருவானது தான் அபிதான சிந்தாமணி.

நூல் உருவான வரலாற்றைப் பற்றி நூலாசிரியர் சிங்கார வேலு முதலியார் தமது முதற் பதிப்பு முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

    "நான் இந்த அபிதான சிந்தாமணி என்னும் இந்நூலைச் சற்றேறக் குறைய 1890-ஆம் வருஷங்களுக்கு முன் தொடங்கினேன். இது எனது அரிய நண்பரும் சென்னை பச்சையப்பன் முதலியார் ஹைஸ் கூல் எட் மாஸ்டருமாகிய மகாஸ்ரீ சி.கோபாலராயரவர்கள், பி.ஏ., என மண்டரம் வெங்கடராமையரவர்கள் செய்த "புராண நாம சந்திரிகை' போல், தமிழில் ஒன்று இயற்றின் நலமாம் என்று அந்தப் புத்தகமும் ஒன்று கொடுத்துதவ, அதனை முதல் நூலாகக் கொண்டு "புராண நாமாவளி' என்று பெயர் புனைந்து எழுதத் தொடங்கியது''.

 

    இந்நூலை எழுதி வரும் போது சிலர் வாயிலாகக் கேட்ட தகவல்கள் மறந்து விடாமல் இருப்பதற்காகத் தமது கைப்புத்தகத்தில் குறித்துக் கொள்வாராம் ஆசிரியர். பின்னர் அதை எழுதும் புத்தகத்தில் பதித்துக் கொண்டு, அவற்றைச் சில நாள்கள் கழித்து அகர வரிசைப் படுத்தி மீண்டும் பெயர்த்து எழுதியுள்ளார்.

 

    நூலை அச்சில் கொண்டு வர பல்வேறு தடைகள் ஏற்பட்டன சிங்கார வேலு முதலியாருக்கு. சொந்தமாக வெளியிட எண்ணமும் ஆர்வமும் இருந்த போதிலும் அவரது ஆசிரியப் பணி மூலம் குறைவான வருமானமே கிடைத்தது. ஆகவே தமிழ் - பருவ இதழ்களில் எதிலாவது வெளியிட நினைத்து ஓர் அறிக்கை தயாரித்து வெளியிட்டார்.

 

இதழ் உரிமையாளர்களோ பல காரணங்களைக் கூறித் தட்டிக் கழித்தனர். காலம் கடந்து சென்றது. இதைப் பயன்படுத்திக் கொண்டு வேறு சிலர் இதே போன்ற வேறு நூல்களை எழுதத் தொடங்கினார்கள். மீண்டும் அவர் மற்றொரு அறிக்கையைத் தயாரித்து இதழ்களின் மூலம் வெளிப்படுத்தினார். இவரது அறிக்கைகளைப் பற்றி அறியும் போது மகாகவி பாரதியார், தமது நூல்களை அச்சில் கொண்டு வர மக்களிடம் நிதியுதவி வேண்டி அறிக்கை வெளியிட்ட கதை தான் நினைவு வருகிறது.

காலம் கனிந்தது. அபிதான சிந்தாமணியை வெளியிடும் பொருள் வசதியும் ஈர நெஞ்சமும் கொண்ட மனிதர் யாராவது தமிழகத்தில் இல்லாமலா போய் விடுவார்கள்? இருக்கத் தான் செய்தார். 

அவர் தான் மதுரைத் தமிழ்ச் சங்கத்துத் தலைவரும் பாலவனத்தம் ஜமீன் தாரும், தமிழ் வளர்த்த பெருமகன் பொன்னுசாமித்தேவரின் குமாரரும் ஆகிய பொ.பாண்டித்துரை சாமித் தேவர் என்பவர். இவர், சிங்கார வேலு முதலியார் வெளியிட்ட அறிக்கையைப் பார்த்து, தாமே சென்னைக்கு வருகை தந்து அபிதான சிந்தாமணி நூலின் கையெழுத்துப் படியைக் கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தார்.

 

கையெழுத்துப் படியை மதுரைக்கு எடுத்துச் சென்ற பாண்டித்துரை சாமித்தேவர், பல தமிழறிஞர்களைக் கொண்டு அதைச் சுத்தமாக எழுதுவித்துப் புதுப்பிரதி தயாரித்தார். அதை எடுத்துக் கொண்டு மீண்டும் சென்னைக்கு வந்து நூலாசிரியரை உடன் வைத்துக் கொண்டு அச்சகத்தில் கொடுத்து அச்சுப் பணி தொடங்க ஆணையிட்டார். அவ்வப்போது அச்சுப்பணிக்கு வேண்டிய பொருளுதவியும் செய்து வந்தார்.

 

    சிங்கார வேலு முதலியார் இந்நூலின் முதல் பதிப்பு முகவுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். "இந்நூல் ஒரு தனிநூல் அன்று. இது பல சான்றோர்கள் இயற்றிய நூல்களின் தொகுப்பாகும்''

 

இதிலிருந்து அவரது பணிவும், அவையடக்கமும் வெளிப்படுகின்றன.

 

    சிங்கார வேலு முதலியார் தமது நூலுக்குத் தமிழில் முகவுரை எழுதியதுடன் அதன் சுருக்கத்தை ஆங்கிலத்திலும் எழுதிச் சேர்த்துள்ளார். அது தமிழறியாதவர்கள் அறிந்து கொள்ள வழி வகுத்தது.

 

    முகவுரையின் தொடக்கத்திலும், நூலின் தொடக்கத்திலும் அவர் எழுதி அமைத்துள்ள அகவற்பாவும், கட்டளைத் துறையும் மரபுக் கவிதை புனையும் அவரது ஆற்றலுக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றன.

 

    அபிதான சிந்தாமணி, தமிழில் வெளி வந்த அகராதிகளின் முன்னோடி எனலாம். சொல்லுக்குச் சொல் பொருள் மட்டும் கூறாமல் சொற்களுக்கு உரிய விரிவான விளக்கங்களையும் கூறுகிறது. அகர வரிசையில் அமைந்த இந்நூல், அகத்திய முனிவர் என்னும் சொல்லுடன் தொடங்கி, வெளவால் என்னும் சொல்லில் முடிகிறது.

 

    நூலின் பிற்பகுதியில் சிவத்தலங்கள், திருமால் தலங்கள், தேவார வைப்புத் தலங்கள், அறுபத்து மூவர் திரு நட்சத்திரம், ஆழ்வார்களின் திரு நட்சத்திரம் முதலிய பட்டியல் இடம் பெற்றுள்ளன. அதன் பிறகு அநுபந்தம் என்னும் பகுதியில் நூலில் விட்டுப் போன சொற்கள் அகர வரிசைப் படுத்தப்பட்டு அவற்றின் பொருளும் தரப் பட்டுள்ளன.

 

    முதல் பதிப்பு வெளியான பிறகு தான் அதில் பல சொற்கள் விடு பட்டுப் போனது நூலாசிரியருக்குத் தெரிய வந்தது. ஆகவே விடு பட்டுப் போன சொற்களையும் மேலும் பல புதிய சொற்களையும் அவர் தொகுத்து வந்தார். இவற்றையெல்லாம் சேர்த்து அபிதான சிந்தாமணியை இரண்டாம் பதிப்பாக வெளியிடும் திட்டத்துடன் அச்சுக்குத் தந்துள்ளார்.

 

    அச்சகத்தில் இருந்து வந்த அச்சுத்தாள்களில் 1000 பக்கங்களை சிங்கார வேலு முதலியாரே பிழை திருத்தம் செய்து வந்தார். ஆனால் 1931-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நோய் வாய்ப்பட்டு அவர் இயற்கை எய்தினார். அதனால், தந்தையாரின் எண்ணத்தை நிறைவேற்றும் ஆவல் கொண்ட அவரது மகன் சிவப்பிரகாச முதலியார் தொடர்ந்து அந்த அச்சுப் பணிகளை மேற் கொண்டார்.

 

    முதல் பதிப்பில் 1050 பக்கங்கள் கொண்ட இந்நூல், இரண்டாம் பதிப்பில் 1634 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது.

 

    1855-ஆம் ஆண்டு பிறந்து 1931-ஆம் ஆண்டு இயற்கை எய்திய சிங்கார வேலு முதலியார், தாம் வாழ்ந்த 76 ஆண்டுகளில் செயற்கரிய இச்செயலைச் செய்து தமிழ் இலக்கிய உலகில் மங்காத புகழ் பெற்றுள்ளார்.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...