எத்தனை முறை பழனி மலைக் கோவிலுக்குப் போயிருக்கிறோம்.
திருக்கோவிலில் உள்ள சித்திரங்களைக் கவனித்திருக்கிறீர்களா?
அந்தச் சித்திரங்கள் அனைத்தும் 'சுப்பிரமணிய பராக்கிரமம்' என்ற நூலின் அடிப்படையில் அமைந்தவை. அந்த 'சுப்பிரமணிய பராக்கிரமம்' நூலை எழுதியவர் கதிரைவேற்பிள்ளை.
அவர் வாழ்ந்தது வெறும் 33 ஆண்டுகள் மட்டுமே. 1874 லில் யாழ்ப்பாணத்தில் பிறந்த அவர் 1907 லில் குன்னூரில் மறைந்தார்.
பிறந்தது இலங்கை யாழ்ப்பாணம் என்றாலும் அவர் வாழ்க்கையின் பயனை அனுபவித்தது தமிழகம் தான்.
சென்னையில் அவர் ஆசிரியராக இறந்த காலத்தில் திருவிக அவருடைய மாணவர்.
சைவ நெறியில் அளவில்லாத பற்றுக்கொண்டவர். சைவத்துக்கு மேல் ஒரு சமயமில்லை.பன்னிரு திருமுறைக்கு மேல் ஒரு அருட்பா இல்லை என்பது அவர் கொள்கை.
வள்ளலார் தான் எழுதிய பாக்களுக்கு திருஅருட்பா என்ற பெயர் சூட்டியபோதும், அப்பாக்களை சிவபெருமான் திருத்தலங்களில் திருமுறைக்குப் பதிலாக ஒதும் போதும் அதை எதிர்த்தவர். அவை அருட்பா அல்ல மருட்பா என்றார். அப்படிச் சொன்னதால் அவர் மீது சென்னையில் வழக்குப் பதியப்பட்டது.
தன் ஆசிரியருக்காக திருவிக திருமுறைகளை மேற்கோள் காட்டி வள்ளலாரின் அருட்பா எப்படி பன்னிரு திருமுறைகளுக்கு முரண்படுகிறது என்று சாட்சி சொன்னார். அந்த வழக்கில் வெற்றியும் கிடைத்தது.
ஒரே நேரத்தில் நூறு செயல்களைக் கவனிக்கும் – விடையளிக்கும்- பா இயற்றும் ஆற்றல் படைத்தவர். ஆகையால் இவரை சதாவதானி கதிரைவேற்பிள்ளை என்றே குறிப்பிடுவார்கள்.
English-Tamil அகராதி இருந்த போதும் அது ஆங்கிலம் படிக்கும்போது பயன்படும். தமிழ் படிப்பவர்களுக்கு தனி அகராதி வேண்டாமா? என்று கேட்டவர் அவர்.
கேட்டதோடு நிற்கவில்லை. தானே அப்படி ஒரு அகராதியை உருவாக்கி வெளியிட்டார்.
பல நூல்களை அவர் இயற்றிய போதும் அவர் எழுதிய தமிழ்ப் பேரகராதி பெரிதும் புகழ்பெற்ற படைப்பு.
அவரால் தமிழ் கற்றுக்கொண்ட ஆங்கில அதிகாரிகள் பலர்.
மார்ச் 26 , 1907 அவர் மறைந்த நாள்.
Comments
Post a Comment
Your feedback