Skip to main content

அப்போதிருந்தே இப்படித்தானா?

 

என்ன தான் பாதுகாப்பான இடங்கள் என்றாலும் அங்கும் கூட, இன்னொரு நாட்டுக்கு உளவு வேலை பார்த்துச் சொல்லும் நிகழ்வுகள் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.


சில நேரங்களில் காவல்துறை, ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களே கூட  தீவிரவாதத்துக்குத் துணையாக விலைபோய்விட்ட செய்திகளையும் படித்திருப்போம்.


ஒரு நாடு தனக்கு எதிரி என நினைக்கும் இன்னொரு நாட்டுக்குள் உளவு பார்க்க ஆள்களை அனுப்பி விபரங்களைத் தொடர்ந்து பெறுவதும் உண்டு. வெளி நாடுகளில் போய் உளவு வேலை பார்க்கவேண்டியே  தனியாக ஒரு துறை ஒவ்வொரு நாட்டிலும் இயங்கி வருகிறது.


இன்றைய மின்னணுப் பயன்பாடு அது போல உளவு வேலைகள் செய்ய வசதியாகவும் போய்விடுகிறது.


இதெல்லாம் இன்று நேற்று வந்த பிரச்னைகள் என்று நினைத்தால் நாம் நினைப்பது தவறு .

இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் அதற்கும் முன்பு நடந்த  செய்திகளைக் கூறுகிறது.

கண்ணகிக்கு கோவில் அமைக்க இமயமலை சென்று கல் எடுத்துவரவேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள். அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இருந்தாலும் தன் முடிவில் உறுதியாக இருக்கிறான் செங்குட்டுவன்.

"நான்  இமயம் வரை என்று கண்ணகிக்குச் சிலை செய்யக் கல் எடுத்து வர, பெரும்படையுடன் வரப்போவதை வடக்கே உள்ள மன்னர்களுக்கு ஓலை அனுப்பி அறிவியுங்கள். அந்த அறிவிப்பின் மீது வில், புலி, மீன் ஆகிய மூவேந்தர் முத்திரைகளைப் பொறியுங்கள்" என்று ஆணையிடுகிறான் செங்குட்டுவன்.

 உடனே அழும்பில்வேல் எழுந்து "மன்னா! அதற்குத் தேவையே இல்லை. இந்த  நாட்டின் எல்லா பகுதியிலிருந்தும் வந்துள்ள அத்தனை   உளவாளிகளும் நம் தலைநகர் வஞ்சியில் தான் இப்போது இருக்கின்றனர். வஞ்சி நகரெங்கும் முரசு அறைந்தால் போதும். நாடு முழுதும் செய்தி உடனே போய்ச் சேர்ந்துவிடும்' என்று பதிலுரைக்கிறான்.


நாவலம் தண்பொழில் நண்ணார் ஒற்று நம்

காவல் வஞ்சிக் கடை முகம் பிரியா;

வம்பணி யானை வேந்தர் ஒற்றே

தஞ்செவிப் படுக்கும் தகைமைய அன்றோ?

அறைபறை என்றே அழும்பில்வேள் உரைப்ப.

(சிலப்பதிகாரம்)

இவ்வளவு பெரிய அதிர்ச்சியான செய்தியை போகிற போக்கில் மன்னனிடம்  கூற முடிகிறது என்றால் உளவாளிகளை உளவு பார்க்க என்றே சேரன் செங்குட்டுவன் படையில் ஒரு தனிப்பிரிவு இருந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள அதிக முயற்சி வேண்டுமா என்ன?


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...