காடை, கௌதாரி என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். காடைக் குருவி மிகக் குறுகிய தூரம் பறக்கக் கூடிய ஒரு பறவை.
தோட்டம், காடுகளில் தரையை ஒட்டி புழு பூச்சிகளைத் தின்று வாழுகின்ற ஒரு பறவை. காடைக் குருவியை வேடர்கள் கண்ணி வைத்துப் பிடிப்பது வழக்கம்.
அப்படிப் பிடித்த ஒரு காடைக்குருவியை தரையில் வைத்து அதன் மேல் கூடையைக் கவிழ்த்து வைத்துவிட்டு மற்றொரு கண்ணியைப் பார்க்க வேடன் ஒருவன் போகிறான். சிறிது நேரம் கழித்து பிடித்த இந்தக் காடைக் குருவியை எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று வந்து கூடையை லாவகமாகத் தூக்கிப் பார்க்கிறான். வெறும் கூடை தான் இருக்கிறது. கூடைக்குள்ளிருந்த காடையைக் காணோம். ஒரே குழப்பம் அவனுக்கு. காடை எப்படி அதற்குள் காணாமல் போகும்?
காடையை கூடைக்குள் வைத்து மூடி விட்டுப் போன பின், அந்தக் குருவி தரையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கிளறி கூடையின் ஓரமாக கொஞ்சம் பள்ளம் தோண்டியது. அந்தப் பள்ளத்துக்குள் நுழைந்து கூடையின் மறுபுறம் வந்து பறந்து போய் விட்டது. காடை போனது அப்படியே இருக்கட்டும். அதற்குள் இதையும் பார்த்துவிடுவோம்.
பாண்டிய மன்னன் நகர் வலம் போகிறான். ஒரு வீட்டுக்கு முன்பாக அவன் செல்கிறான். அந்த வீட்டுப் பெண்ணுக்கோ ஒரே பதட்டம். தன்னுடைய பெண் பாண்டிய மன்னனைப் பார்த்தால், அவன் அழகில் மயங்கித் தடுமாறி விடுவாள் என்று நினைக்கிறாள். உடனே பெண்ணை உள்ளே இழுத்துக்கொண்டு போய் உள் அறையில் விட்டுவிட்டு கதவை மூடித் தாளிட்டு விட்டு வந்து உட்காருகிறாள். பாண்டிய மன்னனின் பவனியும் வீட்டைத் தாண்டிச் சென்றுவிட்டது. அப்புறம் தான் அவளுக்கு நிம்மதியே வந்தது.
உள்ளே இருக்கும் அந்தப் பெண் சிரிக்கிறாள். அந்தப் பெண் மனசு சொல்கிறது.
"எங்கம்மா கதவை அடைப்பதற்கு முன்பே நான் பாண்டியனைப் பார்த்து விட்டேன். பார்த்தவுடனே என் மனசு அவன் கூடவே போய் அரண்மனையில் சேர்ந்து விட்டது. குருவி பறந்து போனபின்பு கூடையைத் தூக்கிப் பார்த்து ஏமாந்து போன வேடன் மாதிரி எங்கம்மா என் மனசு அவங்கிட்டப் போனபின்பு வெறும் உடம்பை வீட்டுக்குள் அடைத்து வைத்து விட்டு அமர்ந்திருக்கிறாள்."
கோட்டெங்கு சூழ்கூடற் கோமானைக் கூடவென
வேட்டங்குச் சென்றெவன் நெஞ்சறியாள் - கூட்டே
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை
வெறுங்கூடு காவல்கொண் டாள்.
(முத்தொள்ளாயிரம்)
Comments
Post a Comment
Your feedback