செப்டம்பர் 22,1791:
மைக்கேல் பாரடே இங்கிலாந்தில் இன்று தான் பிறந்தார்.
செப்டம்பர் 22,1547:
“சாண்டாமாரியா” என்னும் கப்பலைக் காப்பீடு செய்து அதற்கான காப்பீட்டுப் பத்திரம் (Marine Insurance Policy) ஜான் புரோக் என்பவருக்கு வழங்கப்பட்டது.
முதல் மரைன் இன்சூரன்ஸ் பாலிஸி இது.
செப்டம்பர் 22,1914:
“எம்டன்” என்னும் ஜெர்மனி போர்க்கப்பல் சென்னை நகரை குண்டு வீசித் தாக்கியது. இரவு 9:30 மணிக்கு சென்னைத் துறைமுகத்தையும் மற்றும் நகரப் பகுதிகளையும் குண்டுவீசித் தாக்கியது. மொத்தம் 130 குண்டுகளை அது வீசியது.
முதல் உலகப் போரின் போது சென்னையில் குண்டுவீசப்பட்டது பற்றிய ஒரு குஜிலிப் பாடல் இது.
(குஜிலிப்பாட்டு என்பது ஓரளவு எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் பாடும் பாட்டு என்பதால் எழுத்துப் பிழைகள் மலிந்திருக்கும்)
உ
செந்தில் ஆண்டவர் துணை
செஏன்னப் பட்டணத்தில் ஜெர்மன் எம்டன் கப்பல் கடர்க்கரையிலிருந்து குண்டடி ஆரம்பிக்க பிரிட்டிஷ் சேனைகள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து எம்டன் கப்பலை குண்டால்அடித்துத் துரத்திய வல்லமை சிந்து.
இஃது விஜயபுரம் நா. சபாபதி பிள்ளை அவர்களால் இயற்றியதை பூர்வீகம் ஏனங்குடியிலிருந்து இப்போது விஜயபுரம் பள்ளிவாசல் தெருவில் வந்திருக்கும் செ.மு. முகமது காசீன் றாவுத்தர் அவர்களின் முயர்ச்சியின் பேரில் அச்சிடப்பட்டது.
இஃது மன்னார்குடி பாரதி பிரஸில் பதிப்பிக்கப் பெற்றது.
1914 பைசா 6
விருத்தம்
கொடி முழங்கும் இங்கிலீஷின் ,மகுடம் வாழ கீர்த்தி பெற்ற செங்கோல் முன் தழைத்து வாழ முடி வணங்கி சிற்றரசர் புடைகள் சூழ
உல்லாச கொடி வழங்க உலகமெல்லாம்
படி வரியாய் நழுவாது குடிகள் தன்னை பக்குவமாய் ஆதரிக்கும் பமணிங்கிலீஷ்
இடி முழங்கும் தொனியுடனே யுத்தம் செய்யும் என்னேவொண்ணா வல்லபத்தை இயம்புவேனே.
கும்மி
ஆண்டு துலாயிரத் தானபதி னான்கில்
ஆனதோர் செப்டம்பர் மாதமதில்
வேண்டிய தேதி இருபத்தி ரெண்டினில்
விழுந்த தென்றார் குண்டு சென்னை தனில்.
ஜெர்மனி எம்டன் குரூஸர் கப்பலது
சென்னை கடற்கரை தென்கிழக்கில்
அருணனி ரங்கி இருட்டுக ளானதும்
அங்கே ஒளியுடன் நின்றதுவே.
நின்று எதிர்நோக்கி பட்டணம் தன்னில்
நிமிஷ மிருபது நேர மட்டும்
குண்டுகள் விட்டுமே கோட்டை லைட் ஹவுஸ்
குந்தம் செய்ய குண்டை விட்டனறே.
ஜெனறலென்னும் போஸ்ட் ஆபீஸின் பில்டிங்குகள்
சீர்பெரும் தந்தி ஆபீஸில்
கன விரைவாக ஓர் குண்டு வீழ்ந்திட
கட்டடத்தில் துளை சொற்பம் என்றார்.
கடற்கரை உள்ள ஓர் கிட்டங்கிதனிலும்
காணும் போர்ட் ஆபீஸ் கூரையிலும்
தடபுட சத்தமாய் குண்டு விழுந்திட
சார்ப்பின் கூரை கொஞ்சம் பத்தியதே.
சின்ன ரயிலென்னும் தென்னிந்தியா வண்டி
சீரான காரேஜ் பீச்சில் நிற்க
முன்னே விழுந்திட குண்டுமதன் பேரில்
மூலையில் கொஞ்சம் எரிந்ததென்றார்.
என தொடர்ந்து கும்மிப் பாடல் வடிவில் உள்ளது இந்த குஜிலிப்பாடல்.
செப்டம்பர் 22, 1916
நாவலாசிரியர் விந்தன் பிறந்த நாள்.
செப்டம்பர் 22, 1930
பிரபல பின்னணிப்பாடகர் பி. பி. ஸ்ரீநிவாஸ் பிறந்த நாள்.
'காலங்களில் அவள் வசந்தம்' எனும் பாடலால் என்றும் வாழும் குரலுக்குச் சொந்தக்காரர்.
தமிழ்ப் படங்களில் ஜெமினி கணேசனுக்கு இவரது குரல் அழகாகப் பொருந்திப்போனது.
ஏப்ரல் 14, 2013 இவர் மறைந்த நாள்.
செப்டம்பர் 22, 1931-
எழுத்தாளர் அசோகமித்திரன் பிறந்த நாள்.
இவரது இயற்பெயர் தியாகராஜன். அசோகமித்திரன் என்பது புனைபெயர். இவருடைய எழுத்து எளிமையும் மெல்லிய நகைச்சுவையும் கொண்டது . ஆங்கிலத்தில் பெரும் புலமை பெற்றவர் இவர். பெரும்பாலும் ஆங்கில நாளிதழ்களில் தான் எழுதி வந்தார். அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த பெருமைக்குரியவர்.
1996-இல் அப்பாவின் சிநேகிதர் என்ற இவரது சிறுகதை சாஹித்ய அகாடெமி விருது பெற்றது.
மார்ச் 23, 2017 இவர் மறைந்த நாள்.
செப்டம்பர் 22,1972:
ராவண காவியம் உள்ளிட்ட சில நூல்களை எழுதிய புலவர் குழந்தை மறைந்த தினம்.
செப்டம்பர் 22, 1993:
மணிப்பூரில் டாலோலாஸ் என்னும் கிராமத்தில் குகி இனத்தைச் சேர்ந்த 13 குழந்தைகள் உயிரோடு கொளுத்தப்பட்டனர்.

Comments
Post a Comment
Your feedback