தன் குழந்தை குறித்து ஒரு தந்தை குழந்தை நல மருத்துவரிடம் கேட்ட கேள்வியும் அதற்கு மருத்துவர் கூறிய விளக்கமும்.
குழந்தையின் தந்தையின் கேள்வி:
நாலரை வயதான என் மகள் மிக அறிவுக் கூர்மையும் ஆராயும் தன்மையும் உள்ளவள். படிப்பில் சிறந்து விளங்குகிறாள். ஆனால் அவள் எது செய்தாலும் தன் இஷ்டப்படி தான் செய்வாள். யாரும் அவளை எதையும் செய்யுமாறு அறிவுறுத்ததோ கட்டாயப்படுத்தவோ முடியாது. அருமையாக கதை சொல்லவும் ரசிக்கக் கூடிய வகையில் தன் கற்பனையை விவரிக்கவும் அவளால் முடியும். அவளுக்கு விருப்பம் போல் கதைகளைச் சேர்த்துச் சொல்லுவாள். அவள் முடிவில்லாமல் இவ்வாறு சொல்லுவது சில சமயங்களில் அவள் பொய் சொல்வது போல இருக்கும். இது அவளுக்கு வீட்டிலும் வெளியிலும் குறிப்பாக பள்ளியிலும் பிரச்சினை தருகிறது. என்ன நடக்கிறது என்று தந்தையாகிய எனக்குப் புரியவில்லை. ஓரிரு நாட்களுக்கு பிறகு தான் நடந்த உண்மை எங்களுக்கு தெரிகிறது. பொதுவாக பெரிதாக ஏதும் இருக்காது. ஆனால் அவள் அதைக் குழப்பி விடுகிறாள். அவள் தாயிடம் கூட நடந்ததைக் கூறுவதில்லை. அதற்குப் பதில் கதைகள் கட்டுகிறாள். அது பொய் என மற்றவர்கள் சொல்கிறார்கள். தயவுசெய்து ஆலோசனை கூறுங்கள்.
டாக்டரின் பதில்.
நிஜத்துக்கும் கற்பனைக்கும் பல சமயங்களில் குழந்தைகளுக்கு வித்தியாசம் தெளிவாகத் தெரியாது. அதாவது பார்ப்பதற்கும் கற்பனைக்கும் வேறுபாடு தெரியாது. இது அவர்களுக்கு சிறிது குழப்பமாக உள்ளது. ஆனால் இதை 'பொய்' என்று கருதக்கூடாது. உங்கள் குழந்தை பேசுவதெல்லாம் தன்னுடைய லாபத்துக்காக அல்ல என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஒரு குழந்தை தன் தோழியின் பென்சிலை எடுத்து வந்து "அது மாமா தனக்குத் தந்த பிறந்தநாள் பரிசு" என்று கூறினால் அது பொய். ஆனால் ஒரு குழந்தை தன் தோழிகளிடம் "தன் வீட்டு விழாவில் 20 நண்பர்கள் வந்தார்கள்" எனக் கூறினால் இதை பொய் என்று கருதக்கூடாது. இது கற்பனை ஆசை எனக் கூறப்படுகிறது. என்ன நடக்க வேண்டும் என குழந்தை விரும்பியதோ அதைக் கூறுகிறது என்று பொருள். நாம் மந்திர தந்திரக் கதைகளை குழந்தைகளுக்குக் கூறுகிறோம். இந்தக் கதைகளை உள்வாங்கி, தானே அத்துடன் கதை கட்டிப் பேசுவதும் சாத்தியம். பல குழந்தைகள் இப்படிச் செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அறிவுக் கூர்மையும் பேச்சாற்றலும் உள்ள குழந்தைகள் தம் கதைகள் பெரியவர்களின் கவனத்தை ஈர்க்கின்றன என்று தெரியும்போது இன்னும் கதை கட்டிக் கொண்டே செல்வார்கள். இதைப் பெரிதுபடுத்தாமல் இது உண்மையில் நடந்ததுதானா என்று குழந்தையை விவரிக்கக் கேளுங்கள். ஆனால் பொய் என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம். அவளே அந்தக் கதையைக் கட்டினாளா எனக் கேளுங்கள். அதற்காக மகிழ்ந்து அவளுடன் சிரித்து விடுங்கள். எனினும் அவளுக்கு உண்மையில் நிகழ்ந்ததைக் கூறும் போது கூர்ந்து கவனியுங்கள்.
அங்கிள் டாம்ஸ் கேபின் (Uncle Tom's Cabin) என்னும் புகழ்பெற்ற கதையில் ஒரு குழந்தை எப்போதெல்லாம் தன் திருட்டை ஒப்புக்கொள்கிறாளோ அப்போது அவளுக்கு பாராட்டும் பரிசும் கிடைக்கும். இதனால் அவள் தான் எடுக்காததையும் கூட எடுத்ததாக ஒப்புக்கொள்கிறாள். குழந்தைகள் உங்களுடைய நேரத்தையும் அங்கீகாரத்தையும் விரும்புகிறார்கள். நீங்கள் தெரிந்தே அவளுடன் அதிக நேரம் செலவழித்தால் உங்கள் கவனத்தை ஈர்க்க அதிசய கதைகள் சொல்ல வேண்டியதில்லை என்பதை அவள் உணர்வாள். ஓவியம் தீட்டுதல், காகிதக் கப்பல் செய்தல், காய்கறிகளைக் கொண்டு பொம்மைகள் செய்தல் என சேர்ந்து செய்யக்கூடிய பல வேலைகள் உள்ளன. "வியப்பளிக்கக்கூடிய பல அம்சங்கள் நம் வாழ்க்கையில் உள்ளன. எறும்பு, வண்ணத்துப்பூச்சி, அந்தி நேரத்து வானம் போன்றவை போல. வேறு கற்பனைக் கதைகள் தேவையில்லை" என மாண்டிசோரி அம்மையார் கூறியுள்ளார். கல்வியாளர்கள் அனைவரும் இதை ஏற்பதில்லை என்றாலும் குழந்தைக்கு ஏற்றதை நாம் தேர்வு செய்ய வேண்டும். மாண்டிசோரி கல்வி முறையில் சிறுசிறு வீட்டு வேலைகளில் குழந்தையை உதவி செய்யக்கேட்பது நல்லது எனக் கூறப்படுகிறது. தன் கைக் குட்டையை துவைப்பது கூட நான்கு வயதுக் குழந்தைக்கு உதவியான செயல்.
குழந்தைகள் இத்தகைய நிலையை பொதுவாக கடந்துவிடுவார்கள். ஆனால் எதிர்காலத்தில் எந்தப் பிரச்சினையும் வராமல் இருக்க இதைப்பற்றி நீங்கள் கவனமாக இருப்பதும் சரிதான்.
( Courtesy: NDTV)
Comments
Post a Comment
Your feedback