Skip to main content

மூடித்திறந்த இமையிரண்டும்-தற்குறிப்பேற்ற அணி


    இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின்மீது கவிஞர் தனது குறிப்பை ஏற்றிச் சொல்வது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.


அசையும் பொருட்கள் அசையாப் பொருட்கள் இவற்றின் இயல்பான செயலின் மீது புலவர் தன் குறிப்பை ஏற்றிப் பாடுவது தற்குறிப்பேற்ற அணி என்கிறது தண்டியலங்காரம்.


"பெயர்பொருள் அல்பொருள் என இருபொருளினும்

இயல்பின் விளைதிறன் அன்றி அயல் ஒன்று

தான் குறித்து ஏற்றுதல் தற்குறிப் பேற்றம்"

                                         -தண்டியலங்காரம்.

 

மூடித்திறந்த இமையிரண்டும்

பார் பார் என்றன

முந்தானை காற்றில் ஆடி

வா வா என்றது...

ஆடிக்கிடந்த கால் இரண்டும்

நில் நில் என்றன

ஆசை மட்டும் வாய்திறந்து

சொல் சொல் என்றது.

(கண்ணதாசன்)

 

இமைகள் மூடித்திறப்பதும் முந்தானை காற்றிலாடுவதும் இயல்பான நிகழ்ச்சிகள். அதில் அவன் தன் குறிப்பை ஏற்றி அவை தன்னை அழைப்பதாகக் கருதிக்கொள்வதால் இது தற்குறிப்பேற்ற அணி.

 

அசைந்ததென்னவோ ஒரே கொடி தான். அது வரவேண்டாம் என்பதாக இளங்கோவடிகளுக்கும் வாவென்பதாக கம்பனுக்கும் தோன்றியது.

 

கோவலனை வரவேண்டாம் என்ற இளங்கோவின் கொடி:

    கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகருக்குச் சென்று வணிகம் செய்து  பொருளீட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு செல்கின்றனர். அப்போது அங்குள்ள வாயிலில் கட்டப்பட்ட கொடி இயல்பாக காற்றில் ஆடுகிறது.

 

  இந்த நகருக்குள் நுழைந்தால் நீங்கள் துன்பப்படப் போகிறீர்கள்.கோவலன் கொல்லப்படப் போகிறான். வராதீர்கள்...வராதீர்கள்.... என்று சொல்வதுபோல அந்தக் கொடிகள் அசைவதாக இளங்கோவடிகள் தன் குறிப்பை அந்தக் கொடியின் மீது

ஏற்றிக் கூறுகிறார்.

 

கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும்

தையலும் கணவனும் தனித்துறு துயரம்

ஐய மின்றி அறிந்தன போலப்

பண்ணீர் வண்டு பரிந்தினைந் தேங்கிக்

கண்ணீர் கொண்டு காலுற நடுங்கப்

போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

வாரெலென் பனபோல் மறித்துக்கை காட்ட

                              (சிலப்பதிகாரம்)

 

பொருள் :

 

கண்ணகியும் கோவலனும் பிரிந்து நெடுந் துன்பம் அடையப் போகின்றனர் என்பதை கரிய நெடிய குவளை, அல்லி மற்றும் தாமரை மலர்கள் ஐயமின்றி  அறிந்து வைத்திருந்ததால்...ரீங்காரமிடும் வண்டுகளின் ஒலியோடு தாமும் ஏக்கம் கொண்டு ,

கால் கடுக்க நின்று, நடுநடுங்கி ,கண்ணீர் விட்டு அழுதன.

 

அது மட்டுமல்லாது போரில் தேய்ந்தெடுத்த  மதிலின் மீது கட்டப்பட்டு பறந்து கொண்டிருக்கும் நெடிய கொடிகள்  "நீவீர் மதுரைக்கு வர வேண்டாம். திரும்பிச் சென்று விடுக என்பது போன்று மறுத்துக் கையசைத்துக் கொண்டிருந்தன.

 

ராமனை வாவென்றழைத்த கம்பனின் கொடி:

 

 மையறு மலரின் நீங்கி

   யான் செய்மா தவத்தின் வந்து

செய்யவள் இருந்தாள் என்று

     செழு மணிக் கொடிகள் என்னும்

கைகளை நீட்டி அந்தக்

     கடிநகர் கமலச் செங்கண்

ஐயனை ஒல்லை வா என்று

     அழைப்பது போன்றது அம்மா ! 

                  ( கம்பராமாயணம்)


 பொருள் :


 தான் செய்த பெருந்தவத்தின் காரணமாகவே  குற்றமற்ற அழகிய தாமரை மலரில் இருக்கும் திருமகள் அதிலிருந்து நீங்கி மிதிலை மாநகரில் சீதையாகப் பிறந்துள்ளாள்.

அழகிய தாமரை போன்ற கண்களை  உடைய ராமனே! நீ விரைந்து வந்து சீதையை மணம் முடித்துச் செல்க!  என்பது போன்று அழகிய கொடிகள் தனது கைகளை அசைத்து வரவேற்று நிற்கின்றன.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...