Skip to main content

எப்போது துணிச்சல் வரும்?

 ஒவ்வொரு கோவிலின் அமைவிடம் குறித்து ஒரு வரலாறு அல்லது ஒரு கதை வழிவழியாகக் கூறப்பட்டு வரும். அந்த இடத்தில்தான் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதை சில குறிப்புகள் வழியாக கடவுள் காட்டியதாக முன்னோர்கள் கருதினர். 

அந்த நம்பிக்கையே அந்தத் தலவரலாறுகளுக்கு அடிப்படை. . அந்தக் குறிகள் பொதுவாக இயற்கையை மீறிய நிகழ்ச்சிகளாக இருக்கும்.


வேட்டை நாயை முயல் விரட்டிய இடம், யானையைக் கோழி விரட்டிய இடம் என்பது போன்ற கதைகளைப் படிக்கும்போது அவை வெறும் கற்பனை எனக் கருதுவோரும் உண்டு.

 ஆனால் எளிய விலங்குகள் தன்னை விட பல மடங்கு வலிமையான விலங்குகளை தாக்கி விரட்டிய நிகழ்வுகளை அறிவியலாளர்கள் எழுதியுள்ளனர்.


பாஞ்சாலங்குறிச்சி என்றாலே வீரம் விளைந்த மண் என்று கூறுவார்கள். பாஞ்சாலங்குறிச்சி என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே கட்டபொம்மனின் வீரம் நம் மனதுக்குள் வந்து விடும். வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்தில் சிவாஜி கணேசன் நடித்து, கட்டபொம்மனின் வீரத்தைப் பட்டி தொட்டி எங்கும் பரப்பியது ஒரு காரணம்.


கட்டபொம்மன் கட்டிய கோட்டைக்கும் இப்படி ஒரு வரலாறு இருக்கிறது.


 ஒரு வேட்டை நாய் முயலை விரட்டிக் கொண்டு சென்றது. ஓட்டமெடுத்த அந்த முயல் காளையார்கோவிலில் கட்டபொம்மன் கட்டியுள்ள கோட்டை இருக்கும் இடத்தை அடைந்ததும் விரட்டி வந்த வேட்டை நாயை திருப்பித் தாக்கியது. 

முயலுக்கு தைரியத்தைத் தந்த மண் என்பதால் அந்த இடத்திலே மண்ணிலே கோட்டை கட்டப்பட்டது என்று கோட்டை வரலாற்றை கூறுகிறார்கள்.

மகாகவி பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்தின் முதல் பாகத்தை வாங்கிக் கொண்டுபோய் புதுச்சேரியில் இருந்த ஒரு ஜமீன்தாரிடம் படித்துக் காட்டினார் குவளைக்கண்ணன். 


ஜமீன்தாரும் அவரின் காரியதரிசியும் பாடலை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தனர். முடிவில் இந்தப் பாடல்களை எழுதியவர் யார் என்று காரியதரிசி குவளைக்கண்ணனைக் கேட்டார்.


"இது பாரதியார் என்பவர் பாடியது" என்றார் குவளைக்கண்ணன்.

"பாரதியார் எந்த ஊரில் பிறந்தவர்" என்று அடுத்துக்கேட்டார்.

 "எட்டையபுரம்" என்றார் கண்ணன்.


"இவ்வளவு அருமையான தேசபக்திப் பாடல்களை எழுதியவர் எட்டயபுரத்துக்காரராக இருக்க முடியாது" என்றார் காரியதரிசி.


"இல்லை, இல்லை இதை எழுதிய பாரதி எட்டையபுரத்தில் தான் பிறந்தார்" என்றார் குவளைக்கண்ணன்.


"நிச்சயமாக இருக்க முடியாது. நீ வேண்டுமானால் மீண்டும் ஒருமுறை கேள். பாஞ்சாலங்குறிச்சியிலே ஒரு நாய் பிறந்தால் அதற்கு முன்னே மற்ற நாய்கள் எதிர்த்து நிற்க முடியாது. பாஞ்சாலங்குறிச்சியில் ஒரு வித்வான் பிறந்தால் அவனுக்குப் பதில் பாட்டுப் பாட யாராலும் முடியாது. இந்த வீரம் செறிந்த பாடல்களைப் பாடியது பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்தவராகவே இருக்க வேண்டும். நான் பேசியதை பாரதியாரிடம் சொல்லி நீ விவரம் அறிந்து வா" என்றார் காரியதரிசி.


குவளைக்கண்ணன் பாரதியாரிடம் நடந்ததைக் கூறினார். 

பாரதியாரின் பதிலை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.


"கிருஷ்ணா, எனக்கு எட்டையபுரம் தான். பாஞ்சாலங்குறிச்சி என்பது எட்டையபுரம் ஓரத்தில் இருக்கின்ற ஊர்தான் என்று அவரிடம் சொல்" என்றார் பாரதியார் சிரித்துக்கொண்டே.


இந்த வீர வரலாறு பாஞ்சாலங்குறிச்சிக்கு மட்டும் அல்ல. 

உறையூர் தோன்றிய வரலாற்றை தமிழ் இலக்கியங்களில் நாம் படிக்க முடிகிறது.


முறம் செவி வாரணம் முன்சமம் முருக்கிய புறஞ்சிறை வாரணம் 

என்று சிலப்பதிகாரம் உறையூரைப் பற்றிக் கூறுகிறது.


யானையை கோழி எதிர்த்து வெற்றி பெற்ற ஓரிடத்தை அந்த மண்ணின் பெருமை கருதி உருவாக்கியதே உறையூர் என்று வரலாறு கூறுகிறது. உறையூருக்கு மற்றொரு பெயர் கோழி என்பதாகும்.


பண்டைய சோழ மன்னன் ஒருவன் யானையில் சென்று கொண்டிருந்த போது ஓரிடத்தில் நின்று கொண்டிருந்த கோழியைக் கடக்க முயற்சிக்கும் போது கோபம் கொண்ட கோழி யானையை தாக்கி அதனை மிரண்டு ஓடும்படிச் செய்தது. அந்த இடத்தின் சிறப்பைக் கருதியே கோழி என அந்த இடத்திற்கு பெயர் சூட்டியதாகக் கூறுவர்.


சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் நாம் பார்த்திருந்தோம். புலிக்கு உணவாக உயிருடன் ஒரு நாய் விடப்பட்டது. நாயைப் பார்த்தவுடன் அதை நோக்கி ஓடி வந்த புலியை குரைத்துக் குரைத்தே விரட்டியடித்தது அந்த நாய். 


அதீத பயத்தில் அல்லது இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் எல்லா உயிர்களுக்கும் எங்கிருந்தோ ஒரு அசாத்திய துணிச்சல் வருவதை இதன் மூலம் அறியலாம்.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...