புதுமைப்பித்தனின் கவிதை என்ற தலைப்பிலான கட்டுரையிலிருந்து....
கவிதை கவிதை என்று சொல்லுகிறார்களே அதைப் பற்றி எழுத வேண்டும் என்று எனக்கு வெகு நாளாக ஆசை. இன்றைக்குத்தான் முடிந்தது.
"பேனா எங்கேடா? அடே ராசா நீ எடுத்தியா? குரங்குகளா ஒன்றை மேஜைமேல் வைக்க விடாதீர்கள். அது பேனாவாகவா இருக்கிறது? இருந்தாலும் இந்தக் குழந்தைகள் இருக்கிறதே, மழலையாம், குழலாம், யாழாம்! அதை விட ஒரு ஓட்டைக் கிராமபோனை வைத்துக் கொண்டு காதைத் துளைத்துக் கொள்ளலாம்."
குழந்தைகளால் என்ன பிரயோஜனம்? சுத்தத் தமிழ் பேசத் தெரியுமா? அவைகளுக்குத்தான் என்ன ஒரு கூட்டத்திலே பழகத் தெரியுமா? இன்னும் அழாமல் இருக்கத் தெரியுமா?
எங்கள் வீட்டு ' ராஜா' வைப் பற்றிச் சொல்லவா? சோற்றுக்குத் தாளம் போட்டாலும் வீட்டுக்கொரு 'ராஜா'விற்குக் குறைவில்லை. அதில் மட்டும் பாரதி சொன்னதுக்கு ஒரு படி மேலாகவே இருக்கிறோம். எல்லாரும் இந்நாட்டு மன்னர்களின் தகப்பன்மார்!
எங்கள் வீட்டு 'ராஜா' இருக்கானே அவன் பேச்செல்லாம் பாட்டு; பாட்டெல்லாம் அழுகை. அது தான் கிடக்கிறது. அவனிடத்தில் என்ன அதிசயம் இருக்கிறது? அவனுக்கு இருக்கும் அசட்டுத்தனத்துகக்கு என்ன சொல்லுகிறது? என்னுடைய கைத்தடியை எடுத்துக் கொண்டான், அதுதான் அவனுக்குக் குதிரையாம்! குதிரைக்கும் தடிக்கம்புக்கும் வித்தியாசம் தெரியாத அசட்டைப் பார்த்து யாரால் உற்சாகப்பட முடியும். அதற்கும் ஒரு பிரகிருதி இருக்கிறது, அதுதான் அவன் தாயார்.
அது தான் கிடக்கிறது, தமிழை தமிழாகப் பேசத் தெரிகிறதா? இலக்கணம் தெரியுமா? தொல்காப்பியம் படித்திருக்கிறதா? இந்தக் குழந்தைகளினால் என்ன பிரயோஜனம்? உங்களுக்குத் தெரியுமா அவர்களினால் என்ன பிரயோஜனம்?
ஓஹோ? கவிதையா? இன்னொரு தடவை பார்த்துக் கொள்ளலாம்.
Comments
Post a Comment
Your feedback