சும்மா நமக்குக் கிடைத்ததல்ல சுதந்திரம்.
காந்தி, நேரு என்ற பெயர்களைத் தவிர வேறு எந்தத் தலைவர்களைப் பற்றியும் தெரியாமலேயே சுதந்திர தினத்தை மேம்போக்காக கொண்டாடி மகிழ்கிறோம்.
ஒளிமயமான எதிர்காலம் தனக்கு உறுதியான பிறகும் அதைத் துச்சம் எனத் தூக்கி எறிந்துவிடத் தயாராக இருந்ததை ICS officer ஆக இருந்த சுபாஷ் C.R. தாஸிடம் தெரிவித்து எழுதிய கடிதம் காட்டுகிறது.
விடுதலைப் போரின்போது தமிழகம் இருந்த நிலை பற்றியும் அவர் இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கேம்பிரிட்ஜில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் சித்தரஞ்சன் தாசுக்கு எழுதிய கடிதம்.
ஐயா,
நான் ஒரு வேளை உங்களுக்கு முன்பின் தெரியாதவனாக இருக்கலாம். ஆனால் நான் யார் என்பதை உங்களுக்குத் தெரிவித்தால் என்னை அடையாளம் கண்டு கொள்வீர்கள். ஒரு முக்கியமான விஷயம் குறித்து உங்களுக்கு எழுத விரும்புகிறேன்.
எனது தந்தையார் திரு.ஜானகிநாத் போஸ் கட்டக்கில் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார். சில ஆண்டுகளுக்கு முன் அவர் அரசு வழக்கறிஞராக இருந்தார். எனது மூத்த சகோதரர்களில் ஒருவரான திரு சரத் சந்திர போஸ் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பாரிஸ்டர். உங்களுக்கு என் தந்தையை தெரிந்து இருக்கலாம். எனது அண்ணனை தாங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், பிரசிடென்சி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். 1916இல் ஏற்பட்ட அமளியின் போது நான் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன். இரண்டு ஆண்டுகளை இழந்த பின் கல்லூரிப் படிப்பை மேலும் தொடர அனுமதி கிடைத்தது. அதன் பின் 1919 ஆம் ஆண்டில் நான் பிஏ தேர்வு எழுதினேன். ஹானர்சில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்.
1919 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நான் இங்கு வந்து சேர்ந்தேன். 1920 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சிவில் சர்வீஸ் தேர்ச்சி அடைந்து நான்காவது இடத்தைப் பெற்றேன்.
இப்போது நான் விசயத்துக்கு வருகிறேன். அரசாங்க வேலையில் சேர எனக்கு சிறிதும் விருப்பமில்லை. இந்த சர்வீஸை கைவிட்டுவிட விரும்புவதாகக் கூறி தாய்நாட்டில் உள்ள எனது தந்தைக்கும் சகோதரருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். அவர்களிடமிருந்து இன்னமும் பதில் வரவில்லை.
சர்வீஸை விட்டபின் நான் உருப்படியாக என்ன வேலை செய்ய விரும்புகிறேன் என்பது பற்றி, நான் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். சர்வீஸைவிட்டு விலகிய பின் திடமான உறுதியோடு தேசியப் பணியில் இறங்கினால் எவ்வளவோ பணிகள் இருக்கும்.
அதாவது நேஷனல் கல்லூரியில் கல்வி கற்பிப்பது, கிராம சமுதாயங்களை அமைத்து நிர்வகிப்பது, மக்களிடையே கல்வியைப் பரப்புவது போன்ற பலப்பல பணிகள்.
ஆனால் நான் மேற்கொள்ள விரும்பும் உருப்படியான பணி என்ன என்பதை இப்போது நான் என் குடும்பத்தாருக்கு எடுத்துக்காட்ட முடிந்தால் சர்வீஸை விட்டு விலக அவர்களின் அனுமதியை பெறுவது சுலபமாகிவிடும். அவர்களின் ஒப்புதலுடன் நான் சர்வீஸை விட்டுவிட முடிந்தால் அவர்களின் விருப்பத்திற்கு எதிராக எதுவும் செய்ததாக ஆகாது.
நாட்டில் நிலவும் நிலைமையை நீங்கள் நன்கு அறிவீர்கள் நீங்கள் கல்கத்தாவிலும் தாக்காவிலும் தேசிய கல்லூரியை நிறுவிய உள்ளீர்கள் என்றும் ஆங்கிலத்தில் வங்கமொழியிலும் ஷ்வராஜ் என்ற செய்தி ஏட்டினை வெளியிட்டு வருவதாகவும் கேள்விப்பட்டேன். வங்காளத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கிராம சமுதாயங்கள் முதலியன அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூட அறிந்தேன்.
இந்த மாபெரும் தேசிய சேவை திட்டத்தில் நீங்கள் எந்த பணியை எனக்கென ஒதுக்க முடியும் என்பதை அறிய விரும்புகிறேன். கல்வி அறிவும் அறிவாற்றல் திறனும் எனக்கு இல்லை. ஆனால் இளமையின் ஊக்கமும் உற்சாகமும் என்னிடம் இருக்கிறது என்று கூற விரும்புகிறேன். நான் திருமணமாகாதவன். எனது கல்வியை பொருத்தமட்டில் தத்துவத்தை பற்றி சிறிதளவு படித்துள்ளேன்.
கல்கத்தாவில் ஆனர்ஸ் படித்தபோது அதை நான் பாடமாக எடுத்து இருந்தேன். இன்று ட்ரைபாஸ் பட்டப்படிப்பிலும் நான் அதே பாடம்தான் படித்து வருகிறேன். பொருளாதாரம், அரசியல், ஆங்கிலம், ஐரோப்பிய வரலாறு, ஆங்கில சட்டவியல், சமஸ்கிருதம், பூகோளம் போன்ற பல விஷயங்களிலும் குறிப்பிட்ட ஒரு நிலை வரையும் நான் கல்வி கற்றிருக்கிறேன். அதற்காக நான் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு நன்றி கூற வேண்டும்.
இந்தப் பணியில் நான் சேர முடிந்தால் இங்கிருந்து ஒன்று இரண்டு வங்காளி நண்பர்களையும் அழைத்து வர முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் நானாகவே இந்தத் துறையில் சேரும் வரையிலும் வேறு யாரையும் நான் அனுப்ப இயலாது.
தற்போது நம் நாட்டில், பொருத்தமான வேலை வாய்ப்பு என்ன என்பதை இங்கு இருந்து கொண்டு என்னால் யோசனை செய்து பார்க்க முடியவில்லை. ஆனால் நான் தாய்நாடு திரும்பிய பின்பு இரண்டு வகையான பணிகளை மேற்கொள்ள முடியும் என்பது என் கணிப்பு.
இவற்றில் ஒன்று கல்லூரியில் கல்வி போதிப்பது மற்றொன்று செய்தித்தாள்களுக்கு எழுதுவது. தெளிவான திட்டவட்டமான திட்டங்களுடன் நான் வேலையை கைவிட்டுவிட விரும்புகிறேன். நான் அதைச் செய்யமுடிந்தால் நினைத்து நினைத்து நேரத்தை நான் செலவிட வேண்டி இருக்காது. வேலையை உதறித் தள்ளிய உடனேயே நான் பணியில் நுழைந்து விட முடியும்.
வங்காளத்தில் இந்தத் தேசிய சேவையின் தலைமை குருவாக நீங்கள் விளங்கி வருகிறீர்கள். அதனால் தான் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். இந்தியாவில் நீங்கள் தொடங்கி வைத்துள்ள மாபெரும் இயக்கம் பற்றிய செய்திகள் கடிதங்கள் மற்றும் ஏடுகள் வாயிலாக இங்கு எட்டியுள்ளன. தாயகத்தின் அறை கூவல் இங்கு கேட்க ஆரம்பித்துவிட்டது.
ஆக்ஸ்போர்டை சேர்ந்த தமிழக மாணவர் ஒருவர் இப்போதைக்கு தமது படிப்புகளை நிறுத்திவிட்டு தாயகத்துக்குத் திரும்பி அங்கு பணியைத் தொடங்கி இருக்கிறார். ஒத்துழையாமை இயக்கம் பற்றி பெருமளவிற்கு ஆலோசனைகளும் விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்த போதிலும் கூட கேம்பிரிட்ஜில் இதுவரை அதிகமாக எதுவும் செய்யப்படவில்லை. யாராவது இதற்கு வழி காட்டினால் அவரைப் பின்பற்றி இங்கு பலரும் சித்தமாவார்கள் என்று நினைக்கிறேன்.
வங்காளத்தில் நமது தேசியத் திட்டத்தின் சீர்திருத்த தலைவர் நீங்கள். ஆகவே தான் நான் இன்று உங்களை அணுகுகிறேன். என்னிடம் உள்ள கல்வி, அறிவுத்திறன், வலிமை மற்றும் உற்சாக உணர்வுடன் உங்களிடம் வந்துள்ளேன். தாய் நாட்டுக்காக அர்ப்பணம் செய்வதற்கு என்னிடம் அதிகமாக எதுவும் இல்லை. என்னிடம் இருப்பவை எனது மனசாட்சியும் எனது பலவீனமான உடல் கட்டமைப்பும் தான்.
இந்தப் பிரம்மாண்டமான தேசிய சேவைத் திட்டத்தில் எனக்கு நீங்கள் எந்தப் பணியை அளித்திட முடியும் என்பதைக் கேட்டறிவதற்காக மட்டுமே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அதை அறிந்து கொண்டால் தாயகத்தில் உள்ள எனது தந்தைக்கும் சகோதரருக்கும் அதனை எழுத முடியும். அந்த நோக்கில் நானும் எனது மனப்போக்கைத் தயார் செய்து கொள்ள இயலும்.
ஒரு விதத்தில் பார்த்தால் நான் இப்போதும் கூட ஒரு அரசாங்க ஊழியர் தான். ஒரு ஐசிஎஸ் ப்ரொபஷனராக இருப்பதால் உங்களுக்கு நேரடியாகக் கடிதம் எழுதத் துணிவில்லை. காரணம் என் கடிதம் தணிக்கை செய்யப்படுகிறது. திரு பிரம்மதநாத் சர்க்கார் என்ற நம்பகமான நண்பர் ஒருவர் மூலமாக இந்தக் கடிதத்தை அனுப்புகிறேன். அவர் இக்கடிதத்தை நேரில் உங்களிடம் சேர்ப்பார்.
இனிமேல் உங்களுக்கு எப்போது கடிதம் எழுதினாலும் இந்த வழியில் தான் நான் எழுதுவேன். நீங்கள் எனக்கு தாராளமாக கடிதம் எழுதலாம். ஏனெனில் இங்கு வரும் கடிதங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும் அபாயம் இல்லை.
எனது உள்நோக்கங்களைப் பற்றி இங்கு யாருக்குமே தெரிவிக்கவில்லை. தாய்நாட்டில் உள்ள எனது தந்தைக்கும் சகோதரருக்கு மட்டும்தான் எழுதி இருக்கிறேன். நான் இப்பொழுது ஒரு அரசாங்க ஊழியர். நான் சர்வீஸில் இருந்து ராஜினாமா செய்திடும் வரை இந்த விஷயத்தை நீங்கள் யாரிடமும் சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நான் இப்போது சித்தமாக உள்ளேன். செயலில் இறங்கிடுமாறு நீங்கள் எனக்கு ஆணையிட்டால் போதும்.
நீங்கள் ஷ்வராஜ் ஆங்கில பதிப்பை வெளியிடத் தொடங்கினால் நான் அதன் துணை ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பணியாற்றிடலாம். தேசிய கல்லூரியின் ஜூனியர் வகுப்புக்கு நான் கல்வி போதிக்கலாம்.
காங்கிரஸ் தொடர்பாக என் மனதில் பல யோசனைகள் உள்ளன. காங்கிரஸ் கூட்டங்களை நடத்த நிரந்தரமான இடம் வேண்டும் என்று நினைக்கிறேன். நமக்கு என ஒரு கூடம் இருக்க வேண்டும். ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடும் மாணவர்களின் குழு ஒன்று அங்கே இருந்து கொண்டு பல்வேறு தேசிய பிரச்சனைகள் பற்றியும் ஆராய்ச்சி செய்யலாம்.
எனக்குத் தெரிந்த மட்டில் இந்திய செலாவணி மற்றும் பிற நாணயங்கள் தொடர்பாக நமது காங்கிரஸுக்கு நிச்சயமான திட்டவட்டமான கொள்கை ஏதுமில்லை. தேசிய மாநிலங்கள் பால் காங்கிரஸ் எத்தகைய மனப்போக்கைக் கடைபிடிக்க வேண்டும் என்பதும் நிச்சயிக்கப்படவில்லை.
வாக்குரிமை தொடர்பாக காங்கிரஸ் நிலை என்ன என்பதும் தெரியவில்லை. இது விஷயத்தில் முயற்சி எதுவும் செய்யப்படாததால் தமிழ்நாட்டில் உள்ள பிராமணர் அல்லாத அனைவருமே அரசுக்கு ஆதரவாகவும் தேசியவாத எதிர்பாளராகவும் ஆகிவிட்டனர்.
காங்கிரஸ் நிரந்தரமான சிப்பந்திகளை பராமரித்திட வேண்டும் என்பதுதான் எனது சொந்தக் கருத்து. தனிப்பட்ட பிரச்சனைகளை அவர்கள் ஆராய்வார்கள். ஒவ்வொருவரும் இதுநாள் வரையான உண்மைகளும் புள்ளி விவரங்களும் சேகரிக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு தனிப்பட்ட பிரச்சினை தொடர்பாகவும் காங்கிரஸ் கமிட்டி கொள்கை வரையும். பல தேசியப் பிரச்சினைகள் தொடர்பாக இன்று காங்கிரசுக்கு திட்டவட்டமான கொள்கையை இல்லை.
அதனால் தான் காங்கிரஸுக்கு நிரந்தரமான இல்லமும் ஆராய்ச்சி மாணவர்களைக் கொண்ட நிரந்தரமான ஒரு சிப்பந்திகள் அமைப்பும் இருந்திட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
இது தவிர உளவிலாக்கா ஒன்றினை காங்கிரஸ் அமைத்திட வேண்டும். நமது நாடு பற்றிய இது நாள் வரையிலான எல்லாச் செய்திகளும் இந்த இலாக்காவிடம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். பிரச்சார இலாக்கா ஒவ்வொரு மாகாண மொழியிலும் சிற்றேடுகளை பிரசுரித்திட வேண்டும். அவை பொதுமக்களிடையே இலவசமாக விநியோகிக்கப்பட வேண்டும். இதைத் தவிர நமது தேசிய வாழ்வில் ஒவ்வொரு பிரச்சினை குறித்தும் ஒரு புத்தகத்தை பிரசார இலாக்கா பிரசுரிக்கும். இத்தகைய ஒரு புத்தகத்தில் காங்கிரஸின் கொள்கை விளக்கமாக எடுத்து கூறப்படும். இத்தகைய ஒரு கொள்கைக்கு உட்பட்ட அதற்கான அடிப்படைக் காரணங்களும் அந்தப் புத்தகத்தில் தரப்படும்.
இந்தக் கேள்விகள் எல்லாம் உங்களுக்குப் புதியவை அல்ல. எனக்கு இவை முற்றிலும் புதியதாகத் தோன்றுவதால் இவை பற்றி என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. காங்கிரஸ் தொடர்பாக ஏராளமான பணிகள் நம் முன் இருக்கின்றன என்று நான் கருதுகிறேன். நீங்கள் விரும்பினால் இந்த விஷயத்தில் என்னாலான பணிகளை ஆற்ற முடியும்.
நான் உங்கள் கருத்துக்களுக்காகக் காத்திருப்பேன். எனக்கென நீங்கள் எந்த வகையான பணிகளை ஒதுக்கப் போகிறீர்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன். பத்திரிக்கைத் தொழிலைக் கற்றுக் கொள்வதற்காக நீங்கள் யாரையாவது இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்க விரும்பினால் நான் இந்தப் பணியை மேற்கொள்ளத் தயாராக இருக்கிறேன். எனக்கு இந்த வேலை அளிக்கப்பட்டால் கப்பல் பயணம் மற்றும் ஆடைகளுக்கான செலவுகள் மிச்சமாகும். இந்தப் பணியை மேற்கொள்வதற்கு முன்னால் நான் சர்வீஸில் இருந்து ராஜினாமா செய்து விடுவேன் என்பதில் சந்தேகம் இல்லை.
எனது சாப்பாட்டுக்கும் தங்குவதற்கான செலவிற்கும் நீங்கள் பணம் தருவீர்கள் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் வேலையை விட்டு விலகிய பின்னர் வீட்டிலிருந்து நான் பணத்தை ஏற்றுக் கொள்வது சரியானது அல்ல.
நான் வேலையில் இருந்து விலகினால் ஜூன் மாதத்தில் தாயகத்துக்குப் புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்பது என் சொந்த விருப்பம். ஆனால் அவசியம் ஏற்பட்டால் அதனைக் கைவிடவும் நான் தயாராக இருக்கிறேன்.
இந்தக் கடிதம் நீண்டுவிட்டதற்கு என்னை மன்னிக்கவும். நீங்கள் முடிந்த வரையிலும் விரைவிலேயே பதில் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். என் பணிவு வணக்கங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.
மரியாதையுடன்,
சுபாஷ் சந்திரபோஸ்
Comments
Post a Comment
Your feedback