Skip to main content

மருவூர்ப்பாக்கம் -இது இன்றைய தெரு அல்ல


இன்றைய தெருக்கள் எப்படி இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்மைப் போல நாகரிகம் இல்லாத நாட்களில் அந்தத் தெருக்கள் எப்படி இருந்திருக்கும்?

மருவூர்ப்பாக்கம் என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு இடம். அங்கிருந்த ஒரு தெரு வழியே நாம் நடந்து போனால் என்னவெல்லாம் பார்க்கலாம்?

அதை நேரலையாகப் பார்ப்பது போல சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் காட்டுகிறார்.

அந்தத் தெரு வழியே ஒரு பயணம்.

இது தான் தெருவோரத்தில் நாம் காணும் காட்சி.

மேனியில் அழகுக்காகப் பூசும் வண்ணப் பொடிகள், மணத்துக்காக உள்ள பொடிகள், சந்தனம், பூ, அகில் போன்ற புகையும் பொருள்கள், மணத் தூவிகள் (perfume) முதலானவற்றை விற்றுக்கொண்டு நகர-வீதியில் நடமாடும் வணிகர்கள் திரிகின்றனர்

வண்ணமும், சுண்ணமும், தண் நறுஞ் சாந்தமும்,

பூவும், புகையும், மேவிய விரையும்

பகர்வனர் திரிதரும் நகர வீதியும்;

அடுத்து,

பட்டு, மயிர், பருத்தி முதலானவற்றில் நூல்களை நூற்று ஆடையாக நெய்யும் காருகர் வாழும் இருப்பிடங்களைப் பார்க்கிறோம்.

பட்டினும், மயிரினும், பருத்தி நூலினும்,

கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும்;

(காருகர் என்றால் நெசவாளிகள்)

அடுத்து,

பட்டாடைகள், பவளங்கள், பூ-மாலைகள், அகில் கட்டைகள், முத்துக்கள், மணிக்கற்கள், பொன்னணிகள் - இப்படிப் பல பொருட்கள்  அளவிட முடியாதபடி விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் தெருக்கள் இருக்கின்றன.

(அகில் புகை கூந்தலுக்கு மணம் ஊட்ட

தூசும், துகிரும், ஆரமும், அகிலும்,

மாசு அறு முத்தும், மணியும், பொன்னும்,

அருங்கல வெறுக்கையோடு அளந்து கடை அறியா

வளம் தலைமயங்கிய நனந்தலை மறுகும்;

அடுத்து,

தரம் வாரியாகப் பிரித்து அளந்து தர குவித்து வைக்கப்பட்டுள்ள தானியங்கள் நிறைந்த வீதிகள் இருக்கின்றன.

பால் வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு

கூலம் குவித்த கூல வீதியும்;

அடுத்து,

பிட்டு விற்கும் காழியர்,

அப்பம் சுட்டு விற்கும் கூவியர், 

கள் விற்கும் பெண்கள், 

மீன் விற்கும் பரதவர், 

கல் உப்பு விற்போர்,

வெற்றிலை விற்கும் பாசவர், 

சூடம், சாம்பிராணி போன்ற  வாசனைப் பொருள்களை விற்பவர், 

பலவகையான புலால், கறிகளை விற்கும் ஓசுநர் (கசாப்புக் கடையர்கள்(!)  

ஆகியோரின் இருப்பிடங்கள் இருக்கின்றன

காழியர், கூவியர், கள் நொடை ஆட்டியர்,

மீன் விலைப் பரதவர், வெள் உப்புப் பகருநர்,

பாசவர், வாசவர், பல் நிண விலைஞரோடு

ஓசுநர் செறிந்த ஊன் மலி இருக்கையும்;


அடுத்து,

வெண்கலப் பொருள்கள் செய்வோர் 

செம்புப் பொருள்கள் செய்வோர் 

மரப் பொருள்கள் செய்யும் தச்சர் 

இரும்புக் கருவிகள் செய்யும் கொல்லர்

கஞ்சகாரரும், செம்பு செய்குநரும்,

மரம் கொல் தச்சரும், கருங் கைக் கொல்லரும்,


சிற்பங்கள் செய்யும் கண்ணுள்-வினைஞர், ஓவியர்

மண்ணில் பொம்மைகளும் பாண்டங்களும் செய்யும் வனைவர்,

பொன்னில் அணிசெய்யும் பொற்கொல்லர்,

நவமணி தொழில் புரியும் இரத்தினத் தட்டார்,

உடைகள் தைக்கும் தையல் காரர்கள்,

தோல் பொருள் செய்யும் செம்மார்,

கிழிந்த துணியில் பொம்மை செய்வோர் 

இப்படிப் பலவகைப்பட்ட தொழிலாளர்கள் என எல்லோரும் சேர்ந்து வாழும்  இடங்கள்

கண்ணுள் வினைஞரும், மண்ணீட்டு ஆளரும்,

பொன் செய் கொல்லரும், நன்கலம் தருநரும்,

துன்னகாரும், தோலின் துன்னரும்,

கிழியினும் கிடையினும் தொழில் பல பெருக்கி,

பழுது இல் செய்வினைப் பால் கெழு மாக்களும்;


குழல் யாழ் எதுவாகிலும் ஏழு பண்களையும்

திறன் பொருந்தப் பாடும் வல்ல இசை மரபார்ந்த

பாணர்கள் வாழும் இல்லங்கள் இருக்கின்றன

குழலினும் யாழினும், குரல் முதல் ஏழும்,

வழு இன்றி இசைத்து, வழித் திறம் காட்டும்

அரும் பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்;


சிறு தொழில் செய்தும் பிறர் ஏவல் ஏற்றும் வாழ்க்கை ஓட்டி

வாழ்வோர் என எல்லோரும் ஒருவரோடு ஒருவர் இணக்கமாக வாழும் இடம் மருவூர்ப் பாக்கம் என முத்தாய்ப்பாக முடிக்கிறார் இளங்கோவடிகள்.

சிறுகுறுங் கைவினைப் பிறர்வினையாளரொடு

மறு இன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும் -

நாம் இருக்கும் இந்தக் காலம் தான் நாகரிகம் வளர்ந்த காலம் என்று நினைத்திருப்போரை நிச்சயம் வியப்பில் ஆழ்த்தும் இந்த மருவூர்பாக்கம்.

சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - - இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

 


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...